

மும்பை:
மழைக்கால முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மும்பையின் பல்வேறு பகுதியில் 500-க்கும் அதிகமான சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. சாலை சீரமைப்பு பணிகளை முடிக்க நேற்று கடைசி நாள் ஆகும். ஆனால் இன்னும் சுமார் 250 சாலை சீரமைப்பு பணிகள் முடிக்கப்படவில்லை. ஏற்கனவே மும்பையின் பல இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. இன்னும் ஒரு வாரத்தில் மழை காலம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில் மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, “சாலை பணிகளை கொடுக்கப்பட்ட காலத்திற்குள் முடிக்க உத்தரவிட்டு இருந்தோம். காலக்கெடுவிற்குள் பணிகளை முடிக்காத ஒப்பந்ததாரருக்கு அபராதம் விதிக்க திட்டமிட்டுள்ளோம். பணியை தாமதமாக முடிக்கும் ஒவ்வொரு நாளுக்கும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்” என்றார்.
எனினும் இந்த அபராத தொகை மிக குறைவாக இருப்பதாக பா.ஜனதாவின் மும்பை மாநகராட்சி தலைவர் மனோஜ் கோடக் கூறினார்.