கல்விக் கட்டணம் கேட்டு வற்புறுத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை- தமிழக வாழ்வுரிமை கட்சியின் மனுவிற்கு கல்வி அலுவலர் பதில்

தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணம் கேட்பதாக புகார் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
குழந்தைகளின் உண்டியல் பணத்தை வைத்து மனு அளிக்க சென்ற நிர்வாகிகள்
குழந்தைகளின் உண்டியல் பணத்தை வைத்து மனு அளிக்க சென்ற நிர்வாகிகள்
Published on

புதுக்கோட்டை:

கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருப்பதால் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அரசின் மறு உத்தரவு வரும் வரை அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களும் பள்ளிக் கட்டணம் கேட்கக்கூடாது என புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். 

ஆனால் அதையும் மீறி சில தனியார் கல்வி நிறுவனங்கள், பெற்றோர்களை கல்விக் கட்டணம் கட்டச்சொல்லி வற்புறுத்துவதாக புகார் எழுந்தது.

எனவே கல்விக் கட்டணம் கேட்பதை தடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பாக, மாவட்ட செயலாளர் நியாஸ் அகமது தலைமையில் புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. குழந்தைகள் சேமித்த உண்டியல் பணத்தை வைத்து தனியார் கல்வி நிறுவனங்களுக்கு நிதி வழங்கி, பெற்றோர்களை தொந்தரவு செய்யக்கூடாது என மனு அளிக்கப்பட்டது. 

இந்த மனுவை பரிசீலனை செய்த முதன்மைக் கல்வி அலுவலர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார். 

இது தொடர்பாக மனுதாரர் நியாஸ் அகமதுவுக்கு முதன்மைக்கல்வி அலுவலர் பதில் கடிதம் அனுப்பி உள்ளார்.

அதில், ‘கல்வி கட்டண தொகையை செலுத்தக் கோரி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் கட்டாயப்படுத்திடக் கூடாது எனவும், கல்வி கட்டண தொகை கோருவதாக ஏதேனும் புகார் பெறப்பட்டால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது’ என்று முதன்மைக் கல்வி அலுவலர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com