

பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான சித்தம்பலம், அனுப்பட்டி, மாணிக்காபுரம், கணபதி பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கொத்தமல்லி விவசாயம் நடைபெறுகிறது.
கார்த்திகை மாதத்தில் கொத்தமல்லி பயிரிடப்பட்டு தற்போது அறுவடைக்கு வந்துள்ளது. கடந்த மாதங்களில் நல்ல மழை பெய்ததால் கொத்தமல்லி நன்கு வளர்ந்துள்ளது. உற்பத்தி அதிகரித்துள்ளதால் கொத்தமல்லி விலை கடும் சரிவை கண்டுள்ளது.
பல்லடம் சந்தையில் 2 கட்டு கொத்தமல்லி ரூ. 10-க்கு விற்பனையாகிறது. இதனால் விவசாயிகளுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து கொத்தமல்லி விவசாயிகள் கூறும் போது, இந்த வருடம் கொத்தமல்லி நன்கு வளர்ந்துள்ளது கண்டு மகிழ்ச்சி அடைந்தவேளையில் கொத்த மல்லிக்கு உரிய விலை கிடைக்கவில்லை.
மேலும் தேவைக்கு அதிகமாக கொத்தமல்லி வரத்து உள்ளதால் வியாபாரிகள் எங்களை திரும்பி பார்ப்பதில்லை. முதலீடுக்கும், தொழிலாளர்களுக்கு கொடுத்த சம்பளமும் வந்தால் போதும் என்ற நிலையில் உள்ளோம் என்றனர்.