தொடர்மழை காரணமாக மதுரை மார்க்கெட்டுகளில் காய்கறி விலை உயர்வு

தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக காய்கறிகள் வரத்து குறைந்துள்ளதால் மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது.
காய்கறிகள்
காய்கறிகள்
Published on

மதுரை:

மதுரை மாட்டுத்தாவணி மத்திய காய்கறி மார்க்கெட், தமிழ் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் கடைகள் திறக்கப்படுவது இல்லை. இதேபோல் பரவை காய்கறி மார்க்கெட்டில் தமிழ் மாதத்தின் கடைசி சனிக்கிழமைகளில் கடைகள் திறக்கப்படுவது இல்லை.

இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி ஆவணி கடைசி சனிக்கிழமை என்பதால் தோப்பூர் அருகே இயங்கி வரும் பரவை காய்கறி மார்க்கெட் மூடப்பட்டது. இதனால் பரவை காய்கறி மார்க்கெட்டுக்கு வரவேண்டிய காய்கறி சரக்கு வாகனங்கள் வரவில்லை. மதுரை மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டுக்கும் வரத்து இல்லை.

மேலும் தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அங்கு பயிரிடப்பட்டு இருந்த தக்காளி மற்றும் கத்தரி செடிகள் மூழ்கிவிட்டன. இதனால் அங்கிருந்து காய்கறிகள் வருவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளதாக நிர்வாகி பி.எஸ்.முருகன் தெரிவித்தார்.

குறிப்பாக கிலோ ரூ.25-க்கு விற்கப்பட்ட பச்சை மிளகாய் இன்று ரூ.60 ஆகவும், கிலோ ரூ.40-க்கு விற்ற கேரட் ரூ.50 ஆகவும், கிலோ ரூ.40-க்கு விற்ற முருங்கை, பீன்ஸ் ரூ.80 ஆகவும் விலை உயர்ந்தது. இதேபோல் அனைத்து காய்கறிகளும் ரூ.10 முதல் ரூ.20 வரை விலை உயர்ந்துள்ளன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com