களியக்காவிளையில் காங்கிரசார் மறியல் - வசந்தகுமார் எம்.பி. கைது

சாலைகளை சீரமைக்க கோரி களியக்காவிளையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வசந்தகுமார் எம்.பி., பிரின்ஸ் எம்.எல்.ஏ. உள்ளிட்ட 300 பேரை போலீசார் கைது செய்தனர்.
காங்கிரசார் மறியலில் ஈடுபட்ட காட்சி
காங்கிரசார் மறியலில் ஈடுபட்ட காட்சி
Published on

நாகர்கோவில்:

காவல்கிணறு முதல் களியக்காவிளை வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை மற்றும் கன்னியாகுமரி முதல் காவல்கிணறு வரை தேசிய நெடுஞ்சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது.

இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகிறார்கள். இந்த சாலைகளை உடனே சீரமைக்க கோரி வசந்த குமார் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதைத்தொடர்ந்து இன்று நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் மற்றும் களியக்காவிளையில் காங்கிரஸ் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு வசந்தகுமார் எம்.பி. தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது.

அப்போது அவர்களை போலீசார் தடுத்ததால் போலீசாருடன் காங்கிரசார் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் பிரின்ஸ் எம்.எல்.ஏ. வக்கீல் ராதாகிருஷ்ணன் மற்றும் தொண்டர்கள் சாலையில் அமர்ந்து கோ‌ஷங்களை எழுப்பினார்கள். வசந்தகுமார் எம்.பி., பிரின்ஸ் எம்.எல்.ஏ. உள்ளிட்ட 300 பேரை போலீசார் கைது செய்தனர்.

களியக்காவிளை பஸ் நிலையம் முன்பு நடந்த மறியல் போராட்டத்துக்கு ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். விஜயதரணி எம்.எல்.ஏ. உள்பட ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நடுரோட்டில் நின்றபடி அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினர்.

போராட்டம் நடந்த சாலை நாகர்கோவில்-திருவனந்தபுரம செல்லும் முக்கிய சாலை என்பதால் அந்த சாலையில் போக்குவரத்து பெரும் பாதிக்கப்பட்டது. 2 புறமும் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. போராட்டத்தையொட்டி டி.எஸ்.பி. ராமச்சந்திரன் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

அவர்கள் மறியலில் ஈடுபட்ட காங்கிரசாருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதனை ஏற்காமல் காங்கிரசார் மறியலை தொடர்ந்தனர். இதைத்தொடர்ந்து அவர்களை கைது செய்வதாக போலீசார் அறிவித்தனர். போராட்டத்தில் காங்கிரஸ் தொண்டர் ஒருவர் ரோட்டில் பிணமாக கிடப்பது போன்று நடித்து காட்டினார். அவரை தோளில் தூக்கியபடி காங்கிரசார் ஊர்வலமாக சென்றனர்.

மறியலில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், விஜயதரணி உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் கைதானார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com