

திருவனந்தபுரம்:
மத்தியில் பாரதீய ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியல் சாசனம் திருத்தி எழுதப்படும் என்றும், இந்தியா ‘இந்து பாகிஸ்தான்’ஆகிவிடும் என்றும் திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் சமீபத்தில் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது கருத்துக்கு பாரதீய ஜனதா கண்டனம் தெரிவித்தது.
இந்த நிலையில், திருவனந்தபுரத்தில் உள்ள சசிதரூரின் அலுவலகம் நேற்று தாக்கப்பட்டது. பாரதீய ஜனதா கட்சியின் இளைஞர் அணியினர் இந்த தாக்குதலை நடத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.
இதுபற்றி தனது டுவிட்டர் பதிவில் கருத்து தெரிவித்துள்ள சசிதரூர், “பாரதீய ஜனதாவின் இளைஞர் அணியைச் சேர்ந்தவர்கள் திருவனந்தபுரத்தில் உள்ள எனது தொகுதி அலுவலகத்துக்கு வந்து பெயர் பலகை, நுழைவாயில் கதவு, சுவர் உள்ளிட்ட இடங்களில் கருப்பு நிற என்ஜின் எண்ணெயை ஊற்றி தாக்குதல் நடத்தியதோடு, நான் பாகிஸ்தானுக்கு போகவேண்டும் என்று கோஷம் எழுப்பிவிட்டு சென்று இருக்கிறார்கள். இந்த சம்பவம் பாரதீய ஜனதாவின் உண்மையான முகத்தை காட்டுகிறது” என்று அதில் குறிப்பிட்டு உள்ளார்.