

சிபிஐ அமைப்பில் லஞ்ச ஊழல் தொடர்பான மோதல் உச்சகட்டத்தை எட்டிய நிலையில், சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா இருவரும் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு, கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர். அத்துடன் தற்காலிக இயக்குனராக நாகேஷ்வர ராவ் நியமிக்கப்பட்டார். மேலும் சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா மீதான லஞ்ச புகார் குறித்து விசாரிக்க புதிய குழுவும் அமைக்கப்பட்டது.
சி.பி.ஐ இயக்குனர் அலோக் வர்மாவை நீக்கிய விவகாரத்தில் மத்திய அரசை காங்கிரஸ் கட்சி கடுமையாக சாடியுள்ளது. ரபேல் ஒப்பந்த ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான ஆவணங்களை அலோக் வர்மா சேகரித்து வந்த நிலையில், அவர் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
சிபிஐ இயக்குனர் அலோக் வர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பியதற்காக நாட்டு மக்களிடம் பிரதமர் மன்னிப்பு கேட்கவேண்டும், அலோக் வர்மாவை மீண்டும் பணியமர்த்த வேண்டும் என கட்சி வலியுறுத்த உள்ளதாகவும் அவர் கூறினார். #CBIVsCBI #AlokVerma #CongressProtests