திண்டுக்கல்லில் 15 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் - கடை உரிமையாளர்களுக்கு அபராதம்

திண்டுக்கல்லில் அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் 15 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

திண்டுக்கல்:

தமிழகத்தில் குட்கா பொருட்கள், புகையிலை விற்க தடை விதிக்கப்பட்ட போதும் வியாபாரிகள் மொத்தமாக கொள்முதல் செய்து குடோன்களில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வருகின்றனர். போலீசார் இவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுத்த போதும் புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்ந்து கொண்டே வருகிறது.

குறிப்பாக கல்லூரி மாணவர்களை குறி வைத்து போதை பாக்குகள் விற்பனை செய்யப்படுகிறது என பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இது குறித்து தொடர்ந்து புகார்கள் வந்தன. உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் உத்தரவின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் நடராஜன் தலைமையில் குழுவினர் திண்டுக்கல் நகரில் அதிரடி சோதனை நடத்தினர்.

பழனி ரோடு, மெங்கில்ஸ்ரோடு, பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் சிறு கடைகள் மற்றும் நிறுவனங்களில் அவர்கள் சோதனையிட்டனர்.

அப்போது தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது. அதிகாரிகள் அவர்களிடம் இருந்து சுமார் 15 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் முதல் முறை என்பதால் 3 கடைக்காரர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர். தொடர்ந்து போதை பாக்கு, குட்கா விற்பனை செய்தால் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com