கல்லூரி மாணவி மாயம்- போலீசாரை கண்டித்து உறவினர்கள் திடீர் சாலை மறியல்

ஒட்டன்சத்திரத்தில் கல்லூரி மாணவி மாயமானது குறித்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுக்காததால் உறவினர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கல்லூரி மாணவி மாயம்- போலீசாரை கண்டித்து உறவினர்கள் திடீர் சாலை மறியல்
Published on

ஒட்டன்சத்திரம்:

ஒட்டன்சத்திரம் திடீர் நகரைச் சேர்ந்தவர் முத்துராஜ் அவரது மகள் மஞ்சுளாதேவி (வயது 18). இவர் திண்டுக்கல் அம்பாதுறையில் உள்ள தனியார் பால்டெக்னிக் கல்லூரியில் படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்தார்.

சம்பவத்தன்று மதுரைக்கு வேலைக்கான நேர்காணலுக்குச் செல்வதாக வீட்டில் கூறிச் சென்றார். நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் அவரது தாய் மற்றும் உறவினர்கள் தேடிப் பார்த்ததில் அம்மையநாயக்கனூரைச் சேர்ந்த வெள்ளைச்சாமியின் மகன் ஜெயபாண்டியனுடன் மஞ்சுளா தேவி மாயமாகி இருப்பது தெரியவந்து உள்ளது. இதுகுறித்து மஞ்சுளாதேவியின் தாயார் கோமதி ஒட்டன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். 

புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் ஒட்டன்சத்திரம் போலீஸ் நிலையம் முன்பு திடீர் பஸ் மறியலில் ஈடுபட்டனர். இதனால் திண்டுக்கல் பழனி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் புகாரின் பேரில் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதால் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com