கல்லூரி மாணவியை கடத்தி திருமணம் செய்ய முயன்ற மாணவர்

பிளஸ்-1 மாணவர்களுடன் சேர்ந்து மாணவியை கடத்தி திருமணம் செய்ய கல்லூரி மாணவர் முயன்ற சம்பவம் மாங்காடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கைது
கைது
Published on

பூந்தமல்லி:

மாங்காடு அடுத்த கெருகம்பாக்கம் பகுதியில் வேகமாக சென்ற கார் ஒன்று சாலையோரம் இருந்த பள்ளத்தில் சிக்கியது. அப்போது காரில் இருந்த இளம்பெண் ஒருவர் காப்பாற்றும்படி அலறினார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்றவர்கள் காரில் கதறியபடி இருந்த இளம்பெண்ணை மீட்டனர்.

இதனை தடுக்க முயன்ற காரில் இருந்த 3 வாலிபர்களை சரமாரியாக தாக்கி மடக்கி பிடித்தனர். பின்னர் இதுபற்றி மாங்காடு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விரைந்து வந்து இளம்பெண்ணை மீட்டு 3 வாலிபர்களையும் கைது செய்து விசாரித்தனர். அப்போது மீட்கப்பட்ட இளம்பெண் மவுலிவாக்கத்தை சேர்ந்த கல்லூரி மாணவி என்பது தெரிந்தது.

பிடிபட்ட வாலிபர்கள் மவுலிவாக்கத்தை சேர்ந்த கல்லூரி மாணவரான அரவிந்த்குமார் மற்றும் அவரது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த பிளஸ்-1 மாணவர்கள் என்பது தெரிந்தது.

கல்லூரி மாணவியை மாணவர் அரவிந்த்குமார் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். பலமுறை காதலை வெளிப்படுத்தியும் மாணவி ஏற்கவில்லை.

இதனால் மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்ய அவர் திட்டமிட்டுள்ளார். இதற்காக பிளஸ்-1 படிக்கும் நண்பர்கள் இருவரும் உதவியுள்ளனர்.

சம்பவத்தன்று கல்லூரி செல்வதற்காக நடந்து சென்ற மாணவியை அரவிந்த் குமார் உள்பட 3 பேரும் வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்தி சென்றுள்ளனர்.

பதட்டத்தில் சென்றபோது கார் சாலையோர பள்ளத்தில் சிக்கிக் கொண்டது. இதனால் அவர்கள் பிடிபட்டுள்ளனர். மீட்கப்பட்ட மாணவி மத்திய உளவுப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஒருவரின் மகள் ஆவார்.

கைதான மாணவர் அரவிந்த்குமார் ஜெயிலில் அடைக்கப்பட்டார். உடந்தையாக இருந்த பிளஸ்-1 மாணவர்கள் இருவரும் கெல்லீசில் உள்ள சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டனர். இச்சம்பவம் மாங்காடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com