கல்லூரி மாணவி திடீர் மரணம்: மகள் சாவில் சந்தேகம் உள்ளது என தந்தை புகார்

ஈரோட்டில் கல்லூரி மாணவி திடீரென மரணம் அடைந்தார். என் மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக தந்தை போலீசில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
புகார்
புகார்
Published on

ஈரோடு:

நாமக்கல் மாவட்டம் ராமாபுரம் புதூர் அன்பு நகரைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவரது மகள் சாதனா (வயது 20). ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மூன்றாமாண்டு பயோ மெடிக்கல் படித்து வந்தார். இதற்காக அந்த கல்லூரியின் விடுதியில் தங்கி படித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மாணவிக்கு திடீரென வலிப்பு வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து விடுதியில் தங்கி இருந்த மற்ற மாணவிகள் இது குறித்து காப்பாளருக்கு தகவல் தெரிவித்தனர்.

பின்னர் அந்த மாணவி சிகிச்சைக்காக ஒரு தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அந்த மாணவி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு வந்து மகளின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

பின்னர் மாணவியின் தந்தை சத்தியமூர்த்தி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் தனது மகளுக்கு இதுவரை வலிப்பு வந்ததில்லை என்றும் தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இறந்த மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com