

வேலூர்:
வேலூர் மாவட்ட வங்கியாளர்கள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மாவட்டத்தில் 2020-21 நிதியாண்டிற்கான வேளாண்மை பயிர்க்கடனாக ரூ.6,313 கோடி, விவசாய உள்கட்டமைப்பு கடனாக ரூ.348 கோடி, துணைத் தொழில் கடனாக ரூ.261 காடி என விவசாயத்திற்காக மட்டும் ரூ.7,852 கோடி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
சிறு, குறு, நடுத்தர தொழில்கடனாக ரூ.1,781 கோடி, ஏற்றுமதி கடனாக ரூ.86 கோடி, கல்விக் கடனாக ரூ.729 கோடி, வீட்டு வசதி கடனாக ரூ.1,091 கோடி வழங்கவும், சூரியசக்தி பயன்பாட்டுக்கு ரூ.240 கோடி, சுய உதவி மற்றும் கூட்டுப் பொறுப்பு குழுக்களுக்கான மற்றும் பிரதம மந்திரியின் ஜன்தன் மற்றும் பல காப்பீட்டு திட்டங்களுக்காக ரூ.615 கோடி, இதர சமூக கட்டமைப்பிற்காக ரூ.15 கோடி என மொத்தம் ரூ.12,409 கோடி கடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் முன்னோடி வங்கி மேலாளர் ஜான்தியோடுசியஸ், ரிசர்வ் வங்கி உதவிப்பொது மேலாளர் தாமோதரன், மாவட்ட திட்ட இயக்குனர் மாலதி மற்றும் அனைத்து வங்கி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.