7 பேரின் உடல்களும் இன்று பிற்பகலுக்குள் மறு பிரேதபரிசோதனை செய்யப்படும்- கலெக்டர் தகவல்

தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டில் பலியான 7 பேரின் உடல்களும் இன்று பிற்பகலுக்குள் மறு பிரேதபரிசோதனை செய்யப்படும் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார். #ThoothukudiFiring #SandeepNanduri
7 பேரின் உடல்களும் இன்று பிற்பகலுக்குள் மறு பிரேதபரிசோதனை செய்யப்படும்- கலெக்டர் தகவல்
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டுக்கு பலியான 13 பேரில் 7 பேர்களின் உடல்கள் பிரேதபரிசோதனை நடந்து முடிந்துள்ளது. அந்த உடல்களை மறு பிரேதபரிசோதனை செய்ய வேண்டுமென சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

அதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்காக தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி அரசு ஆஸ்பத்திரிக்கு இன்று வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தூத்துக்குடி கலவரத்தில் பலியான 7 பேரின் உடல்கள் ஐகோர்ட் உத்தரவுப்படி மறு பிரேதபரிசோதனை இன்று மதியம் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர் வருகிறார். ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர், தமிழக மருத்துவர்கள் 2 பேர் பிரேத பரிசோதனை செய்வார்கள்.

மாஜிஸ்திரேட் மற்றும் பலியானவர்களின் உறவினர்கள் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடத்தப்படும். இன்று பிற்பகலுக்குள் பிரேத பரிசோதனை முடிக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மனித உரிமை ஆணைய சிறப்புக்குழு வந்தால் அவர்களுக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குவோம். ஒருநபர் விசாரணை கமி‌ஷனுக்கான அலுவலகம் தயார் நிலையில் உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகள் அரசு அறிவித்தபடி நாளை திறக்கப்படும். மாணவர்கள், பெற்றோர்கள் அச்சப்பட தேவையில்லை.

இவ்வாறு அவர் கூறினார். #ThoothukudiFiring #SandeepNanduri

X

Maalai Malar
www.maalaimalar.com