வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் அறிவிப்பு

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று திருப்பூர் கலெக்டர் அறிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் அறிவிப்பு
Published on

திருப்பூர்:

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்தாண்டுகள் தொடர்ந்து புதுப்பித்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காத படித்த இளைஞர்களுக்கு மாதந்தோறும் தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள்(பொது) ரூ.200, (மாற்றுத்திறனாளி) ரூ.600, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் (பொது) ரூ. 300, (மாற்றுத்திறனாளி) ரூ. 600, பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் (பொது) ரூ. 400 (மாற்றுத்திறனாளி) ரூ.750.பட்டதாரி மற்றும் முதுநிலைப் பட்டதாரிகள் (பொது) ரூ. 600, (மாற்றுத்திறனாளி) ரூ. 1000. வயது வரம்பு (உதவித்தொகை பெறும் நாளில்) ஆதி-திராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதிற்குள், இதர வகுப்பினர் 40 வயதிற்குள் மாற்றுத்திறனாளிகள் உச்சவயது வரம்பு ஏதும் இல்லை. பதிவு செய்து ஓராண்டு முடிந்திருக்க வேண்டும்.

மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு வருமானச்சான்று தேவையில்லை. மனுதாரர் பள்ளி அல்லது கல்லூரிப்படிப்பை தமிழகத்திலேயே முடித்து இங்கேயே 15 ஆண்டுகள் வசித்தவராக இருக்க வேண்டும். மனுதாரர் முற்றிலுமாக வேலையில்லாதவராக இருக்க வேண்டும்.கல்வி நிறுவனத்திற்கு தினமும் சென்று படிக்கும் மாணவ- மாணவிகளாக இருக்கக்கூடாது. ஆனால் தொலைதூரக்கல்வி மற்றும் அஞ்சல் வழிக்கல்வி கற்கும் மனுதாரர்கள் விண்ணப்பிக்கலாம். மனுதாரர் உதவித் தொகை பெறும் காலங்களில் வேலைவாய்ப்பு அலுவலகப்பதிவினைத் தொடர்ந்து புதுப்பித்து வருபவராக இருக்க வேண்டும்.

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவினை புதுப்பித்து 5 வருடங்கள் வேலையில்லாமல் காத்திருப்பவர் கீழ்கண்ட இணையதளம் வாயிலாகவும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலும் இப்படிவத்தினை பெற்று பூர்த்தி செய்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பிப்ரவரிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்து போட்டித்தேர்விற்கும் இணையதளம் மூலமாக விண்ணப்பம் செய்வதற்கும், தேர்வு மையங்களுக்கு சென்று வருவதற்காகவும் இத்தொகை வழங்கப்படுகிறது என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த உதவித்தொகை பெறுவதற்கு தகுதியுடையவர்கள் உடனடியாக திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்படிவம் பெற்றுக் கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com