கோட்டைப்பட்டினம் பகுதி மக்களின் குடிநீர் தேவை முழுமையாக பூர்த்தி செய்யப்படும்: கலெக்டர் உறுதி

கோட்டைப்பட்டினம் பகுதியில் வசிக்கும் மக்களின் குடிநீர் தேவை முழுமையாக பூர்த்தி செய்யப்படும் என்று கலெக்டர் கணேஷ் உறுதி அளித்துள்ளார்.
கோட்டைப்பட்டினம் பகுதி மக்களின் குடிநீர் தேவை முழுமையாக பூர்த்தி செய்யப்படும்: கலெக்டர் உறுதி
Published on

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா கொடிக்குளம் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கி, 283 பயனாளிகளுக்கு ரூ.42 லட்சத்து 51 ஆயிரம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

கோட்டைப்பட்டினம் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வீட்டுமனை பட்டா இல்லாமல் இருந்தது. இதைத்தொடர்ந்து 2 ஆயிரம் வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 800 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட உள்ளது. அவற்றை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வருவாய்த்துறையின் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

கோட்டைப்பட்டினம் பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்க 1,200 அடி வரை ஆழ்துளை போட வேண்டியது உள்ளது. மாவட்டத்தின் மற்ற இடங்களில் ஆழ்துளை கிணறு அமைக்க சுமார் ரூ.6 லட்சம் செலவு ஆகும். ஆனால் கோட்டைப்பட்டினம் பகுதியில் முறையாக ஆழ்துளை கிணறு அமைக்க ரூ.25 லட்சம் செலவாகிறது. 

அப்போதுதான் 30 ஆண்டுகளுக்கு குறையாமல் பயன்படுத்தும் வகையில் ஆழ்துளை கிணறு அமையும். கோட்டைப்பட்டின அனைத்து பகுதி மக்களின் குடிநீர் தேவை முழுமையாக பூர்த்தி செய்யப்படும். இந்த பகுதி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அறந்தாங்கியில் இருந்து வரும் பஸ்கள் கோட்டைப்பட்டினம் வரை வந்து செல்ல ஏதுவாக அரசு பஸ்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த பகுதி பள்ளிகளுக்கு தேவையான கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முகாமில் அறந்தாங்கி எம்.எல்.ஏ. ரெத்தினசபாபதி, மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி, அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் பஞ்சவர்ணம் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com