

புதுச்சேரி:
புதுவை கலெக்டர் அருண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பணியிடங்களில் பெண்கள் பாலியல் துன்புறுத்தலை தடுத்தல், தடை செய்தல் மற்றும் தீர்வு காண்பது தொடர்பாக மத்திய அரசு 2013-ம் ஆண்டு ஒரு சட்டம் இயற்றியது.
இந்த சட்டப்படி 10 பெண்களுக்கு மேல் பணிபுரியும் இடங்களில் இச் சட்டத்தின் பிரிவு 4-ன்படி அங்கு பணிபுரியும் ஒரு பெண் உயர் அதிகாரியை தலைவராக கொண்டு குறைந்தபட்சம் 2 பெண் ஊழியர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன உறுப்பினரை கொண்ட ஒரு குழு அமைக்க வேண்டும்.
இந்த கமிட்டி அனைத்து அலுவலகங்கள், பணியிடங்களில் அமைக்க வேண்டும். மேலும் கமிட்டி தலைமையில் யாரை உறுப்பினர்களாக கொண்டு இயங்குகிறது என்பதை தெளிவுபடுத்தி தகவல் பலகையில் வெளியிட வேண்டும்.
இந்த அறிக்கையை கலெக்டர் மற்றும் துறையின் மாவட்ட அதிகாரிக்கு சமர்பிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் இச்சட்டத்தின் பிரிவு 26-ன்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.