3 ஆண்டு தண்டனையை எதிர்த்து சரிதாநாயர் மேல்முறையீடு

காற்றாலை மோசடி வழக்கில் வழங்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து சரிதா நாயர் மேல்முறையீடு செய்துள்ளார்.
கோவை கோர்ட்டுக்கு வந்த சரிதா நாயர்
கோவை கோர்ட்டுக்கு வந்த சரிதா நாயர்
Published on

கோவை:

கேரளாவை சேர்ந்த நடிகை சரிதாநாயர் கடந்த 2008-ம் ஆண்டு தனது முன்னாள் கணவர் பிஜூ ராதாகிருஷ்ணனுடன் கோவை வடவள்ளியில் ஐ.சி.எம்.எஸ். என்ற நிறுவனத்தை தொடங்கி, மானிய விலையில் காற்றாலை அமைத்து கொடுக்கப்படும் என்று அறிவித்தார்.

இதை நம்பி ஊட்டியில் உள்ள தனியார் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஜோத்சனா கிளியோசந்த் ரூ.6 லட்சமும், வடவள்ளி தனியார் மில்லின் நிர்வாக இயக்குனர் தியாகராஜன் ரூ.26 லட்சமும் நடிகை சரிதா நாயரின் நிறுவனத்தில் முதலீடு செய்தனர். ஆனால் அவர்களுக்கு காற்றாலை அமைத்து கொடுக்கவில்லை.

இது குறித்த புகாரின் பேரில் கடந்த 2009-ம் ஆண்டு கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி பிஜூ ராதாகிருஷ்ணன், சரிதா நாயர் மற்றும் அந்த அலுவலக மேலாளர் ரவி ஆகியோரை கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு கோவை 6-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. இதற்காக சரிதா நாயர், பிஜூ ராதாகிருஷ்ணன், ரவி ஆகியோர் கோர்ட்டுக்கு வந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி கண்ணன், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சரிதா நாயர், பிஜூ ராதாகிருஷ்ணன், ரவி ஆகிய 3 பேரும் குற்றவாளி எனவும், தீர்ப்பு விவரம் மாலை 3.30 மணிக்கு அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அதன்படி மாலையில் சரிதா நாயர், பிஜூ ராதாகிருஷ்ணன், ரவி ஆகிய 3 பேருக்கும் தலா 3 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி கண்ணன் தீர்ப்பு கூறினார். அத்துடன் அபராத தொகையை குறிப்பிட்ட காலத்துக்குள் செலுத்த தவறினால் 3 பேரும் மேலும் தலா 9 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இந்த தண்டனையை நிறுத்தி வைக்கவும், மேல்முறையீடு செய்யவும் சரிதா நாயர், பிஜூ ராதாகிருஷ்ணன், ரவி ஆகியோர் மனு அளித்தனர். அதை விசாரித்த நீதிபதி கண்ணன், அவர்கள் 3 பேரின் தண்டனையை வருகிற 14-ந் தேதி வரை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார். இந்த கால கட்டத்துக்குள் மேல்முறையீடு செய்ய உள்ளதாக சரிதா நாயர் உள்பட 3 பேரின் வக்கீல்கள் தெரிவித்தனர்.

இந்த வழக்கு நுகர்வோர் தொடர்பான வழக்கு தான். காற்றாலை ஒப்பந்தத்தை மீறி 19 மீட்டர் நீளத்துக்கு புதிதாக கேபிள் அமைத்து தருமாறு அந்த நிறுவனத்தினர் கூறினார்கள்.

இதற்கு கூடுதலாக ரூ.1 லட்சம் செலவாகும் நிலை ஏற்பட்டது. இதனால் தான் பிரச்சினை ஏற்பட்டது. ஆனால் இந்த பிரச்சினையை குற்றவியல் வழக்காக மாற்றி எனக்கு தண்டனை விதிக்கப்பட்டாலும் சட்டப்படி மேல்முறையீடு செய்து நியாயம் பெறுவேன்.

கேரளாவில் சூரியமின்தகடு அமைத்து தருவது தொடர்பாக என் மீது பதியப்பட்ட வழக்கு விசாரணைகள் 80 சதவீதம் முடிந்துவிட்டன. என்னை வழக்கில் சிக்க வைத்து அலைய விடுகிறார்கள். கேரளாவில் காங்கிரஸ் அரசு இருந்தபோது எனக்கு பல்வேறு வகையில் மிரட்டல்கள் வந்தன. இப்போது அப்படி மிரட்டல்கள் இல்லை. காங்கிரஸ் ‘ஸீரோ’ ஆகிவிட்டது. அந்த கட்சியை சேர்ந்த பலர் சிறையில் உள்ளனர். அவர்களை வெளியில் கொண்டு வருவதற்கே அவர்களுக்கு நேரம் போதவில்லை. என்னை பற்றிய வீடியோ படங்களை சமூக வலைத்தளங்களில் இருந்து அகற்ற கோர்ட்டை அணுகினேன். அந்த படங்களும் அகற்றப்பட்டு விட்டன.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com