கோவையில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.1½ கோடி மோசடி - தனியார் நிதி நிறுவனம் மீது புகார்

கோவையில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.1½ கோடி மோசடி செய்து தலைமறைவான தனியார் நிதி நிறுவன உரிமையாளர் குறித்து போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கோவையில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.1½ கோடி மோசடி - தனியார் நிதி நிறுவனம் மீது புகார்
Published on

கோவை:

கோவை சரவணம் பட்டியை தலைமையிடமாக கொண்டு தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிதி நிறுவனத்திற்கு பூ மார்க்கெட், துடியலூர் உள்ளிட்ட மாநகரில் 5 கிளைகளும், அன்னூர் உள்பட புறநகரில் பல கிளைகளும் உள்ளன.

இந்த நிறுவனத்தினர் மாதத் தவணையில் ஏலச்சீட்டு நடத்தி வந்தனர். இதில் ஏராளமானோர் வாடிக்கையாளர்களாக சேர்ந்து பணம் கட்டினார்கள்.

கடந்த 2010-ம் ஆண்டு முதல் இந்த நிறுவனம் செயல்பட்டு வந்தது. முதலில் பணம் கட்டியவர்களுக்கு அதனை வட்டியுடன் திரும்பி கொடுத்து வந்துள்ளனர்.

பின்னர் பணம் கொடுக்காமல் இழுத்தடித்து உள்ளனர். இது குறித்து நிதி நிறுவன உரிமையாளரிடம் கேட்ட போது, சில மாதங்களில் பணத்தை திருப்பி தந்து விடுவதாக கூறி உள்ளார்.

கடந்த மே மாதம் முதல் சரவணம்பட்டி தலைமை அலுவலகம் மற்றும் கோவை மாநகர் மற்றும் புறநகரில் உள்ள நிதி நிறுவனத்தில் அனைத்து கிளைகளும் திடீரென மூடப்பட்டது. அங்கு வேலை பார்த்தவர்களும் வேலைக்கு வரவில்லை.

இந்த நிதி நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். அவர்களது செல்போனை தொடர்பு கொண்டது போது சுவிட்ஆப் என வந்தது. நிதி நிறுவன உரிமையாளர் ரூ. 1½ கோடி வரை மோசடி செய்துவிட்டு தலைமறைவாகி விட்டது தெரிய வந்தது.

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் இன்று கோவை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்திற்கு வந்தனர். ஒண்டிப்புதூரை சேர்ந்த சதிஷ், பூமார்க்கெட் ராஜேஷ், சரவணம் பட்டி விநாயகபுரம் சேதுராமன், விஜயகுமார் மற்றும் பெண்கள் உள்ளிட்ட 20 பேர் வந்தனர். அவர்கள் போலீஸ் கமி‌ஷனர் பெரியய்யாவை சந்தித்து மனு அளித்தனர்.

அதில் நிதி நிறுவன உரிமையாளரிடம் இருந்து பணத்தை தங்களுக்கு பெற்று தர வேண்டும் என கூறி உள்ளனர். மனு கொடுக்க வந்தவர்களில் ஒண்டிப்புதூரை சேர்ந்த சதிஷ் ரூ.4½ லட்சம் ஏமாந்ததாக கூறினார்.

இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறும் போது, நாங்கள் குடும்ப செலவு மற்றும் கல்வி, தொழில் உள்ளிட்டவைகளுக்காக சிறுக சிறுக சேர்த்து வைத்த பணத்தை நிதி நிறுவனத்தில் கட்டி இருந்தோம்.

சுமார் 100-க்கும் மேற்பட்டோரிடம் ரூ. 1½ கோடி வரை நிதி நிறுவன உரிமையாளர் ஏமாற்றி தலைமறைவாகி விட்டார். எங்கள் பணத்தை மீட்டு தருமாறு போலீஸ் கமி‌ஷனரிடம் புகார் அளித்து உள்ளோம் என்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com