ஐ.எஸ். அமைப்பில் கோவை தம்பதி - தாயார் அடையாளம் காட்டினார்

ஆப்கானிஸ்தானில் சரணடைந்த பயங்கரவாதிகளின் புகைப்படங்களில் தனது மகள், மருமகன் மற்றும் பேரக்குழந்தையை அவரது தாயார் அடையாளம் காட்டினார்.
பிந்து சம்பத், ஐ.எஸ். தம்பதி பெக்சின், நிமிஷா
பிந்து சம்பத், ஐ.எஸ். தம்பதி பெக்சின், நிமிஷா
Published on

கோவை:

கோவை பொள்ளாச்சியில் வசிப்பவர் மூதாட்டி கிரேசி தாமஸ். இவரது மகன் பெக்சின். இவருக்கும் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த பிந்து சம்பத் என்பவரது மகள் நிமிஷாவுக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.

திடீரென மாயமான இவர்கள் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் இணைந்தனர். அதன் பின் நிமிஷா என்ற பெயரை பாத்திமா என்றும் பெக்சின் என்ற பெயரை இஷா என்றும் மாற்றிக் கொண்டனர். இவர்கள் கேரளாவை சேர்ந்த அப்துல் ரஷீத் என்ற ஐ.எஸ். பயங்கரவாதியுடன் சேர்ந்து தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தான் சென்றனர். அங்கு இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. அங்கு இருந்தபடியே தாயார் பிந்துவுடன் தொலைபேசியில் மகள் நிமிஷா பேசி வந்தார். தன் கணவர் மற்றும் குழந்தையின் புகைப்படங்களை ‘இ மெயில்’ வாயிலாக அனுப்பியுள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பர் 26-ந்தேதி கடைசியாக தன் தாயாருடன் நிமிஷா போனில் பேசியுள்ளார். அதன் பின் அவர்களிடம் இருந்து தகவல் எதுவும் இல்லை. இந்நிலையில் பிந்துவை அவரது வீட்டில் சந்தித்த தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள் ஆப்கனில் சமீபத்தில் சரணடைந்த சில ஐ.எஸ். பயங்கரவாதிகளின் புகைப்படங்களை காட்டினர்.

அதில் தனது, மகள் மருமகன் மற்றும் பேரக் குழந்தை இருப்பதை பிந்து உறுதி செய்தார். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் வசித்து வரும் பெக்சினின் தாயார் கிரேசி தாமஸ் புகைப்படத்தை பார்த்து தனது மகனை அடையாளம் காட்டினார்.

தங்கள் பிள்ளைகளும் பேரக்குழந்தையுடன் பத்திரமாக தாயகம் திரும்புவர் என்ற நம்பிக்கையுடன் காத்திருப்பதாக கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com