

புதுடெல்லி:
அமெரிக்காவை தலைமையமாக கொண்ட காக்னிசன்ட் மொன்பொருள் நிறுவனத்தின் (சி.டி.எஸ்.) கிளைகள் இந்தியாவின் பல இடங்களில் உள்ளன. இதில் ஏராளமான இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், சி.டி.எஸ். நிறுவனம் 2016-17 ஆம் ஆண்டிற்கான வருமான வரியை முழுமையாக செலுத்த வில்லை என வருமான வரித்துறை புகார் அளித்துள்ளது. ரூ.2,500 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அவர்கள் விளக்கம் அளிக்காததையடுத்து, மும்பை மற்றும் சென்னையில் உள்ள சி.டி.எஸ். நிறுவனத்தின் வங்கிக்கணக்குகளை வருமான வரித்துறையினர் முடக்கி உள்ளனர். இதனை எதிர்த்து சி.டி.எஸ். நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்பு வரும் வரை சி.டி.எஸ். நிறுவனம் மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க கூடாது என நீதிமன்றம் வருமான வரித்துறையினரை வலியுறுத்தியுள்ளது.
நிறுவனம் அனைத்து வரியையும் செலுத்தி விட்டது. வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டதால் நிறுவனத்தின் பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பணியில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என சி.டி.எஸ். நிறுவனம் தெரிவித்துள்ளது. #Cognizant #india