

சென்னை:
சென்னை ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் உச்சகட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று பிரச்சாரம் செய்தனர். புதுவண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வேனில் சென்று அவர்கள் வாக்காளர்களிடம் ஆதரவு திரட்டினர்.
பிரச்சாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசும்போது, ஆர்.கே.நகர் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அடிப்படை தேவைகளை நிறைவேற்றியவர் என்றும், தி.மு.க. அதிகாரத்தில் இருந்தபோது இந்த தொகுதிக்கு மு.க.ஸ்டாலின் எதுவும் செய்யவில்லை என்றும் கூறினார்.
‘இந்த தேர்தலில் அ.தி.மு.க. மீண்டும் வெற்றி பெற்றால் இந்த தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றிக் காட்டுவோம். ஆளும் அ.தி.மு.க. ஜெயித்தால் தான் ஆர்.கே.நகர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். ஆர்.கே.நகரில் ஜெயலலிதா பிறந்தநாளன்று பெண்களுக்கு அம்மா ஸ்கூட்டர் வழங்கப்படும்’ என்றும் முதல்வர் உறுதி அளித்தார்.
‘டி.டி.வி. தினகரன் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற நினைக்கிறார். அ.தி.மு.க. வாக்குகளை பிரித்து தி.மு.க.வை வெற்றிபெற செய்ய தினகரன் சதித்திட்டம் தீட்டி இருக்கிறார். ஆர்.கே. நகர் தொகுதி மக்கள் டி.டி.வி. தினகரனை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அ.தி.மு.க.வுக்கு மக்கள் ஆதரவு பெருகிவிட்டதால், ஆர்.கே.நகரில் 3 நாள் பிரசாரம் செய்ய ஸ்டாலின் வருகிறார்’ என்றும் அவர் பேசினார்.
பிரச்சாரத்தின்போது வேட்பாளர் மதுசூதனன் மற்றும் அமைச்சர்கள் உடனிருந்தனர்.