அத்திவரதர் தரிசன நெரிசலில் சிக்கி பலியான 4 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் - முதல்வர் அறிவிப்பு

காஞ்சீபுரத்தில் அத்திவரதர் உற்சவத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலியான 4 பேர் குடும்பத்துக்கு தலா 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.
கோப்புப்ப்டம்
கோப்புப்ப்டம்
Published on

சென்னை:

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில், அத்திவரதர் கடந்த 1-ம் தேதி முதல் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். அத்திவரதரை தரிசிக்க அதிகாலையிலேயே பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

இன்று காலை முதல் அத்திவரதரை தரிசிக்க அதிகளவில் பக்தர்கள் திரண்டனர். இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. சில பக்தர்கள் மயக்கம் அடைந்தனர். இதையடுத்து, அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதற்கிடையே, அத்திவரதர் உற்சவத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சு திணறலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் பக்தர் உள்பட 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சட்டசபையில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். அப்போது அவருக்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி கூறியதாவது:

அத்திவரதரை தரிசிக்க, பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. 10 சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு, 200 மருத்துவர்கள் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

1,200 மீட்டர் தொலைவுக்கு தற்காலிக பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று வரை 25 லட்சம் பேர் அத்திவரதரை தரிசித்துள்ளனர், இன்று மட்டும் மாலை வரை 1.7 லட்சம் பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.

அத்திவரதர் தரிசனத்துக்கு வந்து கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com