புதுக்கோட்டையில் அரசு மருத்துவக்கல்லூரி: எடப்பாடி பழனிச்சாமி திறந்துவைத்தார்

புதுக்கோட்டையில் ரூ.231.23 கோடியில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.
புதுக்கோட்டையில் அரசு மருத்துவக்கல்லூரி: எடப்பாடி பழனிச்சாமி திறந்துவைத்தார்
Published on

புதுக்கோட்டையில் அரசு மருத்துவக்கல்லூரி அமைக்க வேண்டும் என்று இந்த மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

ஜெயலலிதா முதல்- அமைச்சராக இருந்தபோது இதனை ஏற்றுக்கொண்டு சட்டமன்ற கூட்டத்தொடரில் 110-வது விதியின் கீழ் புதுக்கோட்டையில் அரசு மருத்துவக்கல்லூரி அமைப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.

மேலும் புதுக்கோட்டையில் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைக்க ரூ.231 கோடியே 23 லட்சம் நிதி ஒதுக்கீடும் செய்தார்.

அதன் அடிப்படையில் புதுக்கோட்டை-தஞ்சாவூர் சாலையில் மச்சுவாடி அருகே நிலம் தேர்வு செய்யப்பட்டு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டிட கட்டுமான பணிகள் தொடங்கின. சரியாக 11 மாதங்களில் இந்த பணிகள் முழுமை அடைந்தன.

இந்த அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனைத்து வகையான அதிநவீன வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. 75,056 சதுர அடியில் புற நோயாளிகள் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் அனைத்து துறை சம்பந்தப்பட்ட வெளி நோயாளிகள் பரிசோதனை அறைகளும், ரத்த வங்கி, ரத்தப் பரிசோதனை மையங்கள், சிறு அறுவை சிகிச்சை அரங்கம் அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

இதேபோல் 3 லட்சத்து 28 ஆயிரத்து 332 சதுர அடியில் உள்நோயாளிகள் பிரிவு 5 மாடிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. நோயாளிகள் செல்வதற்காக 6 பெரிய லிப்டுகள், மருத்துவ உபகரணங்களை எடுத்து செல்ல 3 லிப்டுகள், தரைதளத்தில் அவசர சிகிச்சை பிரிவு, பிரசவ வார்டு, ரத்த சுத்திகரிப்பு பிரிவு மற்றும் அனைத்து தீவிர சிகிச்சை பிரிவுகளும் உள்ளன.

முதல், இரண்டு, மூன்று மற்றும் 4-வது மாடிகளில் அனைத்து துறைகளின் உள்நோயாளிகள் படுக்கை பிரிவு அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கும் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

புதுக்கோட்டையில் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை திறப்பு விழா இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் 12.30 மணிக்கு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

விழாவில் தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி கலந்து கொண்டு புதிய அரசு மருத்துவக்கல் லூரி மற்றும் மருத்துவமனையை திறந்து வைத்தார். மேலும் அரசு சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி பேசினார்.

விழாவுக்கு தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தலைமை தாங்கினார். பாராளுமன்ற துணை சபாநாயகர் மு.தம்பிதுரை முன்னிலை வகித்தார். மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் வரவேற்று பேசினார்.

இதில் தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அனைத்து துறை அதிகாரிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ் நன்றி கூறினார்.

முன்னதாக விழாவில் கலந்து கொள்ள முதல்- அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை 11 மணிக்கு திருச்சி வந்தார். விமான நிலையத்தில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, திருச்சி மாவட்ட கலெக்டர் கே.ராஜாமணி மற்றும் அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு கார் மூலம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விழா நடைபெறும் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரிக்கு வந்தார். விழா முடிந்ததும் புதுக்கோட்டையில் இருந்து திருச்சி சென்று அங்கிருந்து மாலை தனியார் விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார்.


முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதன் முறையாக புதுக்கோட்டை வருகை தந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. புதுக்கோட்டை நகர் முழுவதும் முதல்-அமைச்சரை வரவேற்று பிரமாண்ட பேனர்கள், அலங்கார வளைவுகள் வைக்கப்பட்டிருந்தன. திறப்பு விழா நடைபெற்ற மருத்துவக்கல்லூரி வளாகம் முழுவதும் மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு இரவில் ஜொலித்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com