

சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக கன மழை பெய்து வருகிறது.
இதில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் பல இடங்களில் இன்னும் மழை நீர் வடியாமல் உள்ளது. போர்க்கால அடிப்படையில் நிவாரண பணிகள் நடைபெற்று வருகிறது.
வெள்ள நிவாரண பணிகளை துரிதமாக மேற்கொள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ள மண்டல வாரியாக அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து பணிகளை முடுக்கி விட நடவடிக்கை மேற்கொண்டார்.
அதன் அடிப்படையில் ஒவ்வொரு அமைச்சர்களும் அந்தந்த பகுதிக்கு நேரடியாக சென்று மழை நீர் வடிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதே போல் காஞ்சீபுரம் மாவட்டத்தில் நடைபெறும் பணிகளை ஒருங்கிணைக்க உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமையில் அதிகாரிகள் குழு செயல்பட்டு வருகிறது.
அமைச்சர்கள், அதிகாரிகள் களத்தில் இருந்தாலும், பெருமழை வந்தால் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்றும் ஆலோசனை நடத்தினார்.
அடையாறு கிரீன்வேஸ் ரோட்டில் உள்ள வீட்டில் நடைபெற்ற ஆலோசனையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து அவர்களுக்கு உணவு, குடிநீர் வழங்குவது மழை நீரை வடிய வைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.