பட்டாக்கத்தியுடன் நடுரோட்டில் மோதல்: மேலும் 4 மாணவர்கள் கைது

சென்னையில் பட்டாக்கத்தியுடன் நடுரோட்டில் மோதலில் ஈடுபட்ட சரவணன், ஆகாஷ், ரகுமான், ரவி ஆகிய 4 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது
கைது
Published on

சென்னை:

கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் நேற்று முன்தினம் அரும்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நடுரோட்டில் 2 கோஷ்டிகளாக மோதிக் கொண்ட சம்பவம் பெரும் பரப்பை ஏற்படுத்தியது.

ரவுடிகளை போல மாணவர்களில் ஒரு பிரிவினர் சக மாணவர்களை ஓட ஓட விரட்டி வெட்டினர். இதில் 7 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 8 மாணவர்கள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 5 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மாணவர்கள் பட்டாக்கத்தியுடன் மோதலில் ஈடுபட்டதை பொதுமக்களே படம் பிடித்து வீடியோவாக வெளியிட்டனர்.

இதனை வைத்து போலீசார் மாணவர்களை அடையாளம் கண்டு கைது செய்து வருகிறார்கள். மதன், சுருதி ஆகிய 2 மாணவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் பட்டாக்கத்தியுடன் மோதலில் ஈடுபட்ட சரவணன், ஆகாஷ், ரகுமான், ரவி ஆகிய 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் சரவணன் தான் கத்தியை எடுத்து வந்து கொடுத்துள்ளார். தலைமறைவாக உள்ள மேலும் 2 மாணவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

மாணவர்களின் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக போலீசார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். நேற்று பச்சையப்பன் கல்லூரிக்கு சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது இணை ஆணையர் சுதாகர் வன்முறையில் ஈடுபடும் மாணவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்று எச்சரித்தார்.

இந்த நிலையில் சென்னை எழும்பூரில் உள்ள தனது அலுவலகத்தில் இணை ஆணையர் சுதாகர் கல்லூரி முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

பச்சையப்பன் கல்லூரி, மாநில கல்லூரி, புது கல்லூரி ஆகிய 3 கல்லூரிகளைச் சேர்ந்த முதல்வர்கள் இதில் கலந்து கொண்டனர். மாணவர்கள் மோதலில் ஈடுபடுவதை தடுப்பது எப்படி என்பது பற்றி இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின்பேரில் கூடுதல் கமி‌ஷனர் தினகரன், பிரேமானந்த் சின்கா ஆகியோரது மேற்பார்வையில் மாணவர்களின் மோதல் சம்பவத்தை தடுக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com