

சென்னை:
குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் வன்முறை வெடித்துள்ளது.
டெல்லியில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டுள்ளது.
சென்னையிலும் நேற்று அசாம் வாலிபர்கள் திடீரென திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மெரினா கடற்கரையில் திடீரென கூடிய 300 பேர் கோஷங்களை எழுப்பினர். அவர்களை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தி நுங்கம்பாக்கத்துக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட அசாம் வாலிபர்கள் பின்னர் கலைந்து சென்றனர். இருப்பினும் அசாம் வாலிபர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டு விடக்கூடாது என்பதில் போலீசார் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள்.
இதனை தொடர்ந்து மெரினாவில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 50-க்கும் மேற்பட்ட போலீசார் கடற்கரை பகுதி முழுவதும் ரோந்து சுற்றி வெளிமாநில மாணவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரில் பணி செய்து வரும் அசாம் மாணவர்களையும் போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.
இதற்கிடையே சென்னை ஐ.ஐ.டி.யில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லியில் மாணவர்கள் மீதான கண்டிக்கும் வகையில் நடந்த இந்த போராட்டத்தில் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியிலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி வளாகத்தில் அமர்ந்து டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடியை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள்.
சென்ட்ரலில் மாணவர் சங்கம் சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.