

கூவம் ஆற்றோரம் 1000 வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது. அவர்கள் குடிசைகள் போட்டு வசித்து வருகிறார்கள். அவர்களை அங்கிருந்து வெளியேற்றி பெரும்பாக்கத்தில் இடம் கொடுக்க மாநகராட்சி முடிவு செய்தது.
ஆக்கிரமிப்பாளர்கள் வீடுகளை காலி செய்ய மாநகராட்சி அதிகாரிகள் ஏற்கனவே கூறி இருந்தனர். ஆனால் அவர்கள் காலி செய்யாமல் இருந்து வந்தனர்.
இன்று காலையில் அதிகாரிகள் போலீசார் உதவியுடன் கூவம் ஆற்றோரம் குடியிருந்து வரும் குடும்பத்தினரிடம் சென்று வீடுகளை காலி செய்ய கூறினர். அதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அவர்களுக்கு பெரும்பாக்கத்தில் இடம் ஒதுக்கி இருப்பதாகவும், வீடுகளை காலி செய்து விட்டு அங்கு செல்லும்படி கூறினர். ஆனால் ஆக்கிரமிப்பாளர்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து அப்பகுதி மக்கள் பொருட்களை எடுக்க முன்வந்தனர். பொருட்களை தங்கள் வீடுகளில் இருந்து ஒவ்வொரு குடும்பத்தினரும் வெளியே எடுத்து பாதுகாப்பாக வைத்துக் கொண்டனர்.
மாநகராட்சி அதிகாரிகள் ஜே.சி.பி. எந்திரத்தை கொண்டு வந்தவுடன் பதட்டமான மக்கள் வேகமாக பொருட்களை பாதுகாத்து கொள்வதில் ஆர்வம் காட்டினர். பொருட்களை வெளியே எடுத்தவுடன் வீடுகளை தரைமட்டமாக்க அதிகாரிகள் தயாரானார்கள்.