ஹாங்காங் போராட்டம்: சீன ராணுவம் குவிப்பால் பரபரப்பு

ஹாங்காங்கில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் அங்கு சீன ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஹாங்காங்கிற்குள் நுழையும் சீன ராணுவ வாகனங்கள்
ஹாங்காங்கிற்குள் நுழையும் சீன ராணுவ வாகனங்கள்
Published on

ஹாங்காங்:

ஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்குபவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையை சந்திக்க வைக்க ஏதுவாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டுவர ஹாங்காங் நிர்வாகம் முடிவு செய்தது. 

இதை எதிர்த்து மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஹாங்காங் நிர்வாக தலைவர் கேரி லேம் சட்ட திருத்த மசோதாவை நிறுத்தி வைப்பதாக  அறிவித்தார். 

ஆனால் சட்ட திருத்த மசோதாவை முழுமையாக ரத்துசெய்ய வேண்டும். போராட்டக்காரர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்ககூடாது என வலியுறுத்தி இரண்டு மாதங்களுக்கு மேலாக மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டக்காரர்களை தடுக்கும் நடவடிக்கையில் உள்ளூர் போலீசார் ஈடுபட்டுள்ளனர். 

இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டு மற்றும் தடியடி தாக்குதல்களை போலீசார் நடத்தி வருகின்றனர். 

இந்த போராட்டத்தை ஒடுக்கும் பணியில் தற்போது வரை சீன ராணுவம் ஈடுபடுத்தப்படவில்லை. ஆனால் போர் மற்றும் போராட்டங்களை ஒடுக்குவது போன்ற ஒத்திகை நிகழ்ச்சிகளை செய்து வந்தனர்.

இந்நிலையில், சீன ராணுவத்தின் படைப்பிரிவுகள் தற்போது ஹாங்காங் நகருக்கு அணி வகுத்துள்ளது. இந்த படைப்பிரிவில் விமானப்படை, கடற்படை மற்றும் ராணுவம் ஆகிய முப்படைகளை சேர்ந்த 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையிலான வீரர்களை உள்ளடக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

சீனாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சீன ராணுவம் ஹாங்காங்கின் வளர்ச்சி மற்றும் அமைதியை நிலைநாட்டுவதற்கு முக்கிய பங்கு வகிக்கும் என தெரிவித்துள்ளது.

ஹாங்காங்கில் போராட்டக்காரர்கள் வார இறுதி நாட்களில் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ள நிலையில் சீன ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com