

பீஜிங்:
அடுத்தடுத்த அணு ஆயுத சோதனைகள் மூலம் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றத்தை அதிகரித்து வந்த வடகொரியா தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளது. அணு ஆயுத சோதனையை கைவிடுவதாக வடகொரிய தலைவர் கிம் ஜாங் அறிவித்தார். 65 ஆண்டுகள் நிலவிய பகையை மறந்து வடகொரிய, தென்கொரிய அதிபர்கள் சமீபத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தையின் போது, அணு சோதனை கூடங்களை வடகொரியா மூட உள்ளதாக கிம் கூறியிருக்கிறார். மேலும், கொரிய போரை அமெரிக்க முறைப்படி முடிவுக்கு கொண்டு வருவதுடன், தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் என அமெரிக்கா உறுதியளித்தால் அணு ஆயுதங்களை கைவிடவும் கிம் தயாராக உள்ளார்.
இந்த சூழ்நிலையில், சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங்க் யி, இந்த வாரத்தில் வடகொரியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். வடகொரிய வெளியுறவு மந்திரி ரி யோங் ஹோ விடுத்த அழைப்பை ஏற்று புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் வாங்க் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்த தகவலை தெரிவித்து உள்ளது.
இந்த பயணத்தின் போது, வடகொரியாவுடனான உறவை மேலும் வலுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடைபெறும் என தெரிகிறது. கடந்த 2007 ஆம் ஆண்டுக்கு பிறகு சீன வெளியுறவுத்துறை மந்திரி, வடகொரியா செல்வது இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.#China #NKorea