

சிரியா மற்றும் ஈராக் நாட்டின் சில பகுதிகளை முன்னர் கைப்பற்றி, அங்கிருந்து பரந்து, விரிந்த இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை உருவாக்க பயங்கரவாத ஆயுதத்தை கையில் ஏந்திய ஐ.எஸ். இயக்கத்தில் சேர்வதற்காக கடந்த 2014-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து சில வாலிபர்கள் சிரியா மற்றும் ஈராக் நாட்டுக்கு சென்றனர்.
இதேபோல், இணையதளங்களின் வழியாக மூளைச்சலவை செய்யப்பட்டு உலகின் பல நாடுகளை சேர்ந்த வாலிபர்களும், இளம்பெண்களும் சிரியா மற்றும் ஈராக் நாடுகளுக்கு சென்றனர். அங்கிருந்த ஐ.எஸ். பயங்கரவாத முகாம்களில் சேர்ந்த அவர்கள் போர் பயிற்சிபெற்று, அரசுப் படைகள் மற்றும் மக்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபட்டனர்.
அவ்வகையில், ரஷியாவில் இருந்து ஈராக் நாட்டுக்கு சென்ற நூற்றுக்கணக்கான பெண்கள் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் வீழ்ச்சிக்கு பின்னர் கைது செய்யப்பட்டனர். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இவர்கள் பல்வேறு சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இப்படி ரஷியாவில் இருந்து ஈராக் வந்த பல பெண்கள் தங்கள் குழந்தைகளையும் அழைத்து வந்திருந்தனர். சில பெண்கள் இங்கு வந்த பின்னர் குழந்தைகளை பெற்றனர். தற்போது தண்டனை அனுபவித்துவரும் இந்தப் பெண்களுடன் அவர்களின் குழந்தைகளும் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதன் ஒருபகுதியாக 16 சிறுமியர் 14 சிறுவர்கள் என 3 முதல் 13 வயதுக்குட்பட்ட 30 குழந்தைகள் முதல்கட்டமாக நேற்று விமானம் மூலம் மாஸ்கோ நகருக்கு அழைத்து வரப்பட்டனர்.
போதிய கவனிப்பின்றி சிறைகளில் வைக்கப்பட்டிருந்த இவர்களில் பலருக்கு உடல்நலக்குறைவு மற்றும் மன அழுத்த பாதிப்புகள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இந்த குழந்தைகள் அனைவரும் மாஸ்கோவில் உள்ள தேசிய மருத்துவமனைக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டனர்.
வரும் ஜனவரி மாதத்தில் மேலும் 36 குழந்தைகளை அழைத்து வரும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக ரஷிய குழந்தைகள் உரிமை அமைப்பின் நடுவர் அன்னா குஸ்னேட்சோவா தெரிவித்துள்ளார். #RussianISFighters #IraqISFighters