தாலி கட்டும் நேரத்தில் குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்

செய்யாறு அருகே தாலி கட்டும் நேரத்தில் குழந்தை திருமணத்தை சமூக நலத்துறை அதிகாரிகள் அதிரடியாக தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமி திருமணம் நிறுத்தம்
சிறுமி திருமணம் நிறுத்தம்
Published on

செய்யாறு:

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டை சேர்ந்த 17 வயது பெண்ணுக்கு செய்யாறு அருகே முனுகப்பட்டு பகுதியில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் நடக்க இருப்பதாக மாவட்ட சமூக நலத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் நேற்று முன்தினம் அந்தக் கோவிலுக்கு சென்றனர்.

கோவிலுக்கு வெளியே பெண்ணுக்கு திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. அங்கு, அதிகாரிகள் சென்று விசாரணை செய்தனர். அதில் மணப்பெண்ணுக்கு 17 வயது ஆவதாக தெரிய வந்தது. மணமேடையில் மாப்பிள்ளையும், மணப்பெண்ணாக சிறுமியும் அமர்ந்திருந்தனர்.

முகூர்த்த நேரம் நெருங்கியபோது மாப்பிள்ளை தாலி கட்ட சென்றார். அதிகாரிகள் விரைந்து சென்று திருமணத்தைத் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பெண் வீட்டாரும், மாப்பிள்ளை வீட்டாரும் அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டது.

“திருமண வயது பூர்த்தியாகாத பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்கக்கூடாது. அவ்வாறு செய்தால் அப்பெண்ணின் எதிர்காலம் பாதிக்கக்கூடும். கல்வி பாதிக்கும். திருமண வயதை அடைந்ததும் அந்தப் பெண்ணின் சம்மதத்துடன் திருமணத்தை நடத்தலாம்” எனக்கூறி மணப்பெண்ணை குழந்தைகள் நலக் குழுமத்தில் ஒப்படைக்க அழைத்துச் செல்ல முயன்றனர்.

அப்போது இரு குடும்பத்தினரும், திருமணம் முடிந்த பிறகு அழைத்துச் செல்லுங்கள் என்றனர். மணப்பெண்ணை எங்கேயும் அனுப்பி வைக்க முடியாது, திருமணத்தை நடத்தியே தீருவோம், என்றனர். அப்போது அதிகாரிகள், கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி பேசிய ஆடியோ மற்றும் குழந்தை திருமணம் செய்து வைப்பவர்கள் மீது மேற்கொள்ளப்படும் கைது, அபராதம் போன்ற சட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கி கூறினர். இதையடுத்து இளம்பெண்ணை அதிகாரிகள் மீட்டு குழந்தைகள் நல குழுமத்தில் ஒப்படைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com