

மதுரை:
மதுரை ஜெய்ஹிந்துபுரம், ஜீவாநகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி முத்துமாரி (வயது 29). இவர்களுக்கு விசாகா என்ற 3 வயது மகள் இருந்தாள்.
செந்தில்குமார் வெளியூரில் வேலை பார்த்து வருகிறார். கணவன்-மனைவிக்கு இடையே பிரச்சினை இருந்துள்ளது.
இன்று காலை முத்து மாரியின் வீட்டுக்கதவு திறக்கப்படவில்லை. சந்தேகமடைந்த அவரது தாயார் போலீசில் புகார் செய்தார்.
ஜெய்ஹிந்துபுரம் போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே போய் பார்த்தனர். அங்கு குழந்தை விசாகா, கழுத்து அறுக்கப்பட்டு பிணமாக கிடந்தாள்.
அவளது அருகில் தாய் முத்துமாரியும் கழுத்து அறுக்கப்பட்டு மயங்கிக் கிடந்தார். மேலும் அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.
அவரை போலீசார் மீட்டு ஜெய்ஹிந்துபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் முத்து மாரி சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.