

புதுடெல்லி:
பிரபல தாதா தாவூத் இப்ராகிமின் நெருங்கிய கூட்டாளியான சோட்டா ஷகீலின் உதவியாளர் ஜுனைத் சவுத்த்ரி நேற்று டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரபல தாதாவும் இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவருமான தாவூத் இப்ராகிமின் வலது கரமாக இருந்தவர் சோட்டா ஷகீல். தாவூத் இப்ராகிமுடன் இணைந்து இவரும் பல குற்றங்களில் ஈடுபட்டுள்ளார். கடந்தாண்டு ஜூலை மாதம் ஹவாலா பணம் கடத்த முயன்றதாகவும், இந்து சபா தலைவரை கொல்ல முயற்சித்ததாகவும் சோட்டா ஷகீலின் உதவியாளர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர், மூன்று மாதங்களுக்கு பின்னர் ஜுனைத் ஜாமீனில் வெளிவந்தார். இதனையடுத்து, அவர் சோட்டா ஷகீலை தொடர்பு கொள்ள முயற்சித்ததாக கூறி அவரது ஜாமீனை நீதிமன்றம் ரத்து செய்தது. இதனால், ஜுனைத் மீண்டும் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறிது மாதங்களுக்கு பின்னர் சிறையிலிருந்து மீண்டும் ஜாமீனில் ஜுனைத் வெளிவந்தார். இந்நிலையில், சட்டவிரோத நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டுள்ளதாக கூறி டெல்லி போலீசார், ஜுனைத் சவுத்திரியை நேற்று கைது செய்தனர். மேலும், அவரிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.