வீரகனூர் போலீஸ் நிலையத்தில் சென்னை பெண் தற்கொலை முயற்சி

டிக்-டாக் மூலம் பழகி பலாத்காரம் செய்த வாலிபர் திருமணம் செய்ய மறுத்ததால் வீரகனூர் போலீஸ் நிலையத்தில் வைத்து சென்னை பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை முயற்சி
தற்கொலை முயற்சி
Published on

சேலம்:

சென்னை பெருங்களத்தூரை சேர்ந்தவர் சசிகலா (வயது 28). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக பணிபுரிந்து வருகிறார்.

சேலம் மாவட்டம் தலைவாசல் வீரகனூரை சேர்ந்தவர் ரமேஷ் (29). போட்டோ ஸ்டூடியோ வைத்துள்ளார். இவர்களுக்கு இடையே டிக்டாக் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

இதற்கிடையே ஆசை வார்த்தை கூறி வீரகனூர் ஏரி அருகே வைத்து ரமேஷ் தன்னை பலாத்காரம் செய்ததாகவும், வெளியே சொன்னால் கொன்று விடுவதாகவும் மிரட்டல் விடுத்ததாக சசிகலா கடந்த ஜூலை மாதம் 15-ந் தேதி ஆன்லைன் மூலம் வீரகனூர் போலீசுக்கு புகார் அனுப்பினார். மேலும் பல பெண்களுடன் ரமேஷ் பழகி வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து போலீசார் விசாரித்து வந்தனர். அப்போது 3 மாதத்தில் சசிகலாவை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்தார். இந்த நிலையில் சசிகலாவை சந்தித்த ரமேஷ் ஏற்கனவே இந்த வழக்கால் நிறைய பணம் செலவாகி விட்டது. எனவே ரூ. 1 லட்சம் வாங்கிக் கொண்டு பிரச்சினை செய்யாமல் விலகிவிடுமாறு பேரம் பேசினார். மீண்டும் பிரச்சினை செய்தாலும், தன்னை தேடி ஊருக்கு வந்தாலும் கொலை செய்வதாக மிரட்டலும் விடுத்தார்.

இதுகுறித்து சசிகலா சென்னை போலீசில் புகார் கொடுத்தார்.அதற்கு ஆதாரமாக தனது செல்போனில் ரமேஷ் பேசியதை சசிகலா பதிவு செய்து வைத்தருந்தார். இதனை அறிந்த ரமேஷ் சசிகலாவிடம் பேசி திருவண்ணாமலைக்கு வரவழைத்தார். அப்போது நண்பர்கள் மூலம் செல்போனை பறிக்க முயன்றார். அவர்களிடம் இருந்து தப்பிய சசிகலா மீண்டும் வீரகனூர் போலீசில் புகார் கொடுத்தார்.

பின்னர் நேற்று வீரகனூர் போலீஸ் நிலையத்திற்கு வந்தார். அதே நேரத்தில் அங்கு வந்த ரமேஷின் சகோதரர், இவள் மருந்து குடித்து செத்தாலும் அந்த வழக்கை எப்படி சந்திக்க வேண்டும் என்று எங்களுக்கு தெரியும் எனக்கூறியவாறு ரமேஷை அங்கிருந்து அழைத்து சென்றார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சசிகலா தான் மறைத்து வைத்திருந்த வி‌ஷத்தை குடிக்க முயன்றார். அதை தடுத்த போலீசார் அவரை சமாதானப்படுத்தினர். மேலும் இன்ஸ்பெக்டர் சென்னைக்கு சென்றுள்ளதால் இன்று விசாரணைக்கு வருமாறு கூறி அனுப்பினர். இதனால் இன்று விசாரணைக்கு அவர் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது போலீசார் 2 பேரையும் சேர்த்து வைக்க நடவடிக்கை எடுப்பார்கள் என்று தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com