

சென்னை:
சென்னையில் தீவுத்திடலில் ஆண்டுதோறும் அரசு தொழில் பொருட்காட்சி நடைபெறுவது வழக்கம்.
கடந்த சில ஆண்டுகளாக மழை, வெள்ளம், புயல் போன்ற இயற்கை சீற்றங்களால் டிசம்பர் மாதம் இறுதியில் தொடங்க வேண்டிய பொருட்காட்சி ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது.
இந்த வருடம் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால் கடந்த 24-ந்தேதிக்கு பிறகு தான் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. தேர்தல் நடத்தை விதிகள் விலக்கி கொள்ளப்பட்டதை தொடர்ந்து பொருட்காட்சியில் அரங்குகள் அமைக்கும் பணி, கடைகள் நிறுவுதல் போன்றவை மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
7 உலக அதிசயங்கள் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு வருகின்றன. மத்திய, மாநில அரசு துறைகளின் திட்டப்பணிகள், சாதனைகள் குறித்து அரங்குகள் நிறுவும் பணி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.
குழந்தைகள், சிறுவர்களை மகிழ்விக்க விளையாட்டு சாதனங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. பொருட்காட்சியை தொடங்குவதற்கான அனைத்து பணிகளும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதனால் இந்த வாரத்தில் பொருட்காட்சியை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 6-ந்தேதி (சனிக்கிழமை) அல்லது 7-ந்தேதி அன்று சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் திறந்து வைக்கிறார்.
பொருட்காட்சியை தினமும் கலைநிகழ்ச்சிகள், நாடகம் போன்றவை இடம் பெறும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் நடத்தப்படும். இந்த பொருட்காட்சி 45 நாட்கள் வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #tamilnews