

சென்னை:
சென்னை சில்க்ஸ் கட்டிடம் இடிக்கும் பணி 2 நாட்களில் முடிவடையும் என்று பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்து உள்ளனர்.
சென்னை தியாகராயநகரில் தீ விபத்துக்குள்ளான சென்னை சில்க்ஸ் துணிக்கடை இடிக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. கட்டிடம் இடிக்கும் பணியில் ‘ஜா கட்டர்’ எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் நேற்றுமுன்தினம் மாலை கட்டிடத்தை இடித்துக்கொண்டு இருந்த ஜா கட்டர் எந்திரம், அதிர்வு தாங்காமல் சரிந்து விழுந்தது. அதன் டிரைவர் சரத்குமார் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் காரணமாக நேற்று கட்டிட இடிப்பு பணி நடைபெறவில்லை.
இந்தநிலையில் சென்னை சில்க்ஸ் கட்டிடம் இடிக்கும் பணி இன்னும் 2 நாட்களில் முடிவடையும் என்று அப்பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
கடந்த 10 நாட்களாக சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டு இருக்கிறோம். நேற்று (நேற்றுமுன்தினம்) நடந்த எதிர்பாராத சம்பவத்தில் சிக்கி எங்களுடன் பணியாற்றிய தொழிலாளி பலியானார். இது மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது. இருப்பினும் எங்களது பணியை தொடர்ந்து செய்கிறோம். இன்று (நேற்று) நாங்கள் பணியை செய்யவில்லை. நாளை (இன்று) காலை முதல் எங்கள் பணி தொடங்குகிறது. இன்னும் 2 நாட்களில் கட்டிடம் இடிக்கப்பட்டு விடும். அதன்பின்னர் கட்டிடத்தை சுற்றி தடுப்பு வேலி அமைத்து இதரபணிகள் மேற்கொள்ள இருக்கிறோம், .
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.