சென்னை-சேலம் பசுமை வழிச்சாலையால் அழியும் பறவை இனம்: இயற்கை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு

சென்னை-சேலம் 8 வழி பசுமை விரைவுச் சாலையால் தூக்கணாங்குருவி உள்ளிட்ட பறவையினங்களும் அழிந்து போகும் நிலை ஏற்படும் என இயற்கை ஆர்வலர்களும், சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டுகின்றனர். #chennaitosalemgreenway
சென்னை-சேலம் பசுமை வழிச்சாலையால் அழியும் பறவை இனம்: இயற்கை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு
Published on

திருவண்ணாமலை:

சென்னை-சேலம் 8 வழி பசுமை விரைவுச் சாலையால் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் பல ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலங்கள், பாசனக் கிணறுகள், பசுமை நிறைந்த காடுகள், பல லட்சம் மரங்கள் அழிக்கப்படுகின்றன.

இதனால் வனத்தை சார்ந்த பல லட்சம் வன உயிரினங்கள் உயிர் இழக்க நேரிடும். ஏற்கனவே நகரத்தை விட்டு கிராமங்களில் ஆங்காங்கே தஞ்சமடைந்துள்ள தூக்கணாங்குருவி உள்ளிட்ட பறவையினங்களும் அழிந்து போகும் நிலை ஏற்படும் என இயற்கை ஆர்வலர்களும், சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து, இயற்கை ஆர்வலர்கள் கூறுகையில், பசுமை வழிச்சாலை திட்டம், தற்போதைய நிலைக்கு அவசியமற்றது. இயற்கையை அழித்தால், இயற்கை நம்மை அழித்துவிடும். ஏற்கனவே, பறவையினங்கள் அழிந்து வருகின்றன. தூக்கணாங் குருவி உள்பட பலவகை பறவைகள் இருக்கும் இடம் தெரியவில்லை.

மற்ற பறவைகளை போல் சாதாரண குருவி என தூக்கணாங் குருவியை எண்ண வேண்டாம். இயற்கை தந்தை என்ஜினீயர். தன் சின்ன அலகால் கூடு கட்டும் அதன் நேர்த்தியே அலாதியானது. வயல்வெளிகளில், வளர்ந்து நிற்கும்நெடுமரங்களின் கிளைகளில் காற்றில் அசைந்து கொண்டிருக்கும் இந்த சின்ன கூடுகள் சொல்லும் கதைகள் ஏராளம்.

தேங்காய் நார், வைக்கோல், இலைகள் என தன் கண்ணுக்கு எட்டும் எல்லாவற்றையும் தன் அலகால் எந்த அளவுக்குப் பாரம் சுமக்க முடியுமோ அந்த அளவுக்கு தூக்கிக் கொண்டு வந்து தன் இணைக்கு கூடு கட்டும் தூங்கணாங்குருவி அன்புக்கு உதாரணம்.

தற்போது அறிவியலின் வளர்ச்சியால் சிட்டுக்குருவிகளின் இனத்தை மெள்ள மெள்ள இழந்து கொண்டிருக்கிறோம். வானலாவிய கட்டிடங்கள் அதிகரித்துள்ளதாலும் செல்போன் கோபுரங்கள் நிறுவியதாலும் நகரங்களை விட்டு கிராமங்களை நோக்கி தூக்கணாங்குருவிகள் தஞ்சமடைந்தன.

தற்போது கிராமங்கள், வயல் வெளிகள், காடுகளை அழிப்பதாலும் நகரத்தை விட்டு இடம் பெயர்ந்த தூக்கணாங்குருவிகள் உள்ளிட்ட பலவகை பறவையினங்கள் கட்டாயம் அழிந்து போகும். மண் வளம், மழை வளத்தை சீரழிக்கும் வகையில் மனிதனின் செயல்பாடுகள் உள்ளது என்று கூறினர்.  #chennaitosalemgreenway

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com