சென்னையில் தனியார் பால் விலை 4 ரூபாய் உயர்ந்தது

சென்னையில் தனியார் பால் லிட்டருக்கு 4 ரூபாய் உயர்ந்து 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
பால் கொள்முதல்
பால் கொள்முதல்
Published on

சென்னை:

தமிழ்நாட்டில் ஆவின் பால் லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தப்பட்டு 1 லிட்டர் பால் ரூ.56-க்கு விற்பனையாகி வருகிறது. ஆவின் பால் உயர்வை தொடர்ந்து தனியார் பால் நிறுவனங்களும் 56 ரூபாய்க்கு பால் விலையை உயர்த்தி கொண்டனர்.

ஆரோக்கியா பால் பாக்கெட் 1 லிட்டர் ஏற்கனவே ரூ.56-க்கு விற்கப்பட்டு வந்ததால் இவர்கள் மட்டும் பால் விலையை உயர்த்தாமல் இருந்தனர்.

இப்போது ஆரோக்கியா பால் நிறுவனம் பால் விலையை இன்று முதல் மேலும் 4 ரூபாய் உயர்த்தி உள்ளது. 1 லிட்டர் பால் விலையை ரூ.56-ல் இருந்து ரூ.60 ஆக உயர்த்திவிட்டது. இது குறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்க தலைவர் பொன்னுசாமி கூறியதாவது:-

ஆவின் உள்பட அனைத்து பால்பாக்கெட் விலையும் ரூ.56-க்கு விற்கும் நிலையில் ஆரோக்கியா பால்பாக்கெட் 60 ரூபாய்க்கு விலையை ஏற்றிவிட்டனர்.

ஆந்திராவை தலைமையிடமாகக்கொண்டு செயல்படும் அனைத்து தனியார் பால் நிறுவனங்களும் கடந்த மாதம் தான் பால் விலையை உயர்த்தினார்கள். இப்போது மீண்டும் லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்த உள்ளனர். ஒரே ஆண்டில் 4-வது முறையாக பால் விலையை உயர்த்துகிறார்கள். இதனால் பால் விற்பனை கடுமையாக வீழ்ச்சி அடையும்.

கடந்த மாதம் தமிழக அரசு ஆவின் பால் விலையை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தியதால் சென்னையில் மட்டும் தினமும் 90 ஆயிரம் லிட்டர் வரை பால் விற்பனை வீழ்ச்சி அடைந்துள்ளது.

எனவே தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் தனியார் பால் விலையை உடனே வரன்முறை படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com