

சென்னை:
சென்னை திருமுல்லைவாயலை சேர்ந்தவர்கள் கணேஷ்குமார், பவித்ரா.
இருவரும் காதல் ஜோடி. கல்லூரி ஒன்றில் பவித்ரா எம்.ஏ. படித்து வருகிறார். கணேஷ்குமார் தனியார் நிறுவனத்தில் சூப்பிரண்டாக உள்ளார்.
இவர்களது காதலுக்கு பெண் வீட்டில் எதிர்ப்பு இருந்து வந்தது. திருமணம் செய்து வைப்பதாக கூறிய பவித்ராவின் தந்தை மனம் மாறி வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்தார். இதனை தொடர்ந்து பவித்ரா, கடந்த 3-ந்தேதி கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு கணேஷ்குமாருடன் சென்று விட்டார்.
இதுபற்றி பவித்ராவின் பெற்றோர் திருமுல்லைவாயல் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
பவித்ராவின் உறவினர் ஒருவர் போலீஸ்காரராக உள்ளார். இவர் காதல் ஜோடிக்கு கடந்த 5 நாட்களாக மிரட்டல் விடுத்து வருகிறார். இதனால் நண்பர்களின் வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ள காதல் ஜோடி ஒரு இடத்திலேயே நிரந்தரமாக தங்காமல் உயிருக்கு பயந்து மோட்டார் சைக்கிளிலேயே சுற்றி வருகிறது. இதனால் கமிஷனர் அலுவலகத்துக்கு நேரில் செல்லாமல் ஆன்லைன் மூலமாக புகார் அளித்துள்ளனர்.
இதுகுறித்து விசாரணை நடத்தி காதல் ஜோடிக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.