

சென்னை:
சென்னையைச் சேர்ந்த 38 வயது கர்ப்பிணி பெண்ணுக்கு 22 வாரத்திலேயே கடந்த மே மாதம் இரட்டை குழந்தை பிறந்தன.
குறை பிரசவத்தில் பிறந்த அக்குழந்தைகளில் ஒரு குழந்தை இறந்தது. மற்றொரு ஆண் குழந்தை பிறக்கும்போதே 510 கிராம் எடை இருந்தது.
அடுத்த 3 நாட்களில் குழந்தை 380 கிராம் எடையாக குறைந்தது. எடை மிகவும் குறைவாக இருந்த அக்குழந்தை மூச்சுவிட சிரமப்பட்டது.
இதையடுத்து குழந்தைக்கு வேறொரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இன்குபேட்டரில் வைத்து டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
டாக்டர்களின் தீவிர சிகிச்சையால் ஆண் குழந்தை 100 நாட்களில் 1.54 கிலோ எடை கூடியது. மேலும் ஆரோக்கியமாக இருந்ததால் குழந்தையை டிஸ்சார்ஜ் செய்தனர். தற்போது அக்குழந்தை 3½ கிலோ எடையுடன் ஆரோக்கியமாக உள்ளது.
இதுகுறித்து டாக்டர்கள் கூறும்போது, “எடை மிகவும் குறைவாக பிறந்த அக்குழந்தை மூச்சுவிட சிரமப்பட்டது. தோல் வழுவழுப்பாகவும், எலும்பு, நுரையீரல் ஆகியவை பலவீனமாகவும் இருந்தது. குழந்தையை காப்பாற்றுவது கடினமான ஒன்று என்பதை நாங்கள் அறிந்து இருந்தோம்.
ஆனாலும் குழந்தை காப்பாற்ற போராடுவோம் என முடிவு செய்தோம். இன்குபேட்டரில் குழந்தையை வைத்து சிகிச்சை அளித்தோம். குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அளித்தோம்.
100 நாட்களில் 1.54 கிலோ கூடியது. தற்போது குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறது. பார்வை மற்றும் கேட்கும் திறன் நன்றாக உள்ளது” என்றனர்.