

சென்னை:
அ.தி.மு.க. ஆட்சியில் கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து 2016-ம் ஆண்டு வரையில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில்பாலாஜி.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு தினகரன் ஆதரவாளராக இருந்த செந்தில் பாலாஜி, பின்னர் தி.மு.க.வில் சேர்ந்தார். அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வும் ஆனார்.
செந்தில்பாலாஜி மீது கடந்த 2017-ம் ஆண்டு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பணம் வாங்கி கொண்டு மோசடி செய்ததாக புகார் கூறப்பட்டது.
81 பேரிடம் ரூ. 1 கோடியே 62 லட்சம் ரூபாய் வாங்கியதாக கூறப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மோசடி வழக்கை பதிவு செய்து இருந்தனர். இந்த வழக்கில் செந்தில் பாலாஜி முன்ஜாமீன் பெற்று இருந்தார்.
இதற்கிடையே கடந்த மாதம் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் அலுவலங்களில் திடீர் சோதனை நடத்தப்பட் டது.
சென்னை மந்தைவெளியில் உள்ள செந்தில் பாலாஜியின் பூட்டிக் கிடந்த வீட்டுக்கு போலீசார் கடந்த 31-ந் தேதி சீல் வைத்தனர். பின்னர் இந்த சீலை உடைத்து சோதனையும் நடத்தினர்.
இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஆஜராக செந்தில் பாலாஜிக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
இதனை ஏற்று அவர் இன்று காலை 9.45 மணி அளவில் வேப்பேரி கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவில் ஆஜரானார் அவரிடம் மோசடி பற்றி தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.