ஆடம்பர செலவுக்காக செல்போன் பறித்த 2 கல்லூரி மாணவர்கள் கைது

சென்னையில் ஆடம்பர செலவுக்காக செல்போன் பறித்த 2 கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
ஆடம்பர செலவுக்காக செல்போன் பறித்த 2 கல்லூரி மாணவர்கள் கைது
Published on

பெரம்பூர்:

பெரம்பூர் மேம்பாலம் அருகே செம்பியம் போலீஸ் உதவி கமி‌ஷனர் ஹரிகுமார், இன்ஸ்பெக்டர் முருகன், சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் ஆகியோர் நேற்று இரவு 11 மணி அளவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வேகமாக வந்தனர். அவர்களை நிற்கும்படி போலீசார் சைகை காட்டினர். ஆனால் அந்த மோட்டார் சைக்கிள் நிற்காமல் வேகமாக சென்றது.

போலீசார் தங்களது வாகனத்தில் விரட்டிச் சென்று, மோட்டார் சைக்கிளை மடக்கிப் பிடித்தனர். அதில் இருந்த 2 பேரையும் செம்பியம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

அப்போது, அவர்கள் வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி மாணவர்கள் என்றும் பொருளாதாரம் 2-வது ஆண்டு படித்து வருகிறார்கள் என்பதும் தெரியவந்தது.

இதில் ஒருவர் கொடுங்கையூரை சேர்ந்த கிறிஸ்டோபர் (19), இன்னொருவர் மோகன சித்தன் (19) எருக்கஞ்சேரியை சேர்ந்தவர்.

இவர்களிடம் விலை உயர்ந்த 3 செல்போன்கள் இருந்தன. இவை வரும்வழியில் வழிப்பறி செய்யப்பட்டவை என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

அதில் ஒன்று மாதவரம் நெடுஞ்சாலையில் இரவு 9 மணி அளவில் பேசிக்கொண்டிருந்த பிரவீன்ராஜ் என்பவரிடம் பறிக்கப்பட்ட செல்போன் என்பது தெரியவந்தது.

இதுபற்றி ஏற்கனவே அவர் செம்பியம் போலீசில் புகார் செய்து இருந்தார். இதுபோல் மற்ற 2 செல்போன்களும் வழிப்பறி செய்யப்பட்டவை என்பதை மாணவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து மாணவர்கள் கிறிஸ்டோபர், மோகன சித்தன் இருவரையும் செம்பியம் போலீசார் கைது செய்தனர். இது குறித்து மாணவர்கள் அளித்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

கல்லூரி தொடங்க இருக்கிறது. கல்லூரி கட்டணம் செலுத்த வேண்டும். ஆடம்பர செலவுக்கும் பணம் தேவை. எனவே, விலை உயர்ந்த செல்போன்களை பறித்து பணம் சம்பாதிக்க திட்டமிட்டோம்.

சிந்தாதிரிபேட்டையை சேர்ந்த ஒருவர் செல்போன்களை வாங்கிக் கொண்டு பணம் தருவதாக கூறினார். எனவே ஆடம்பர செலவுக்கு பணம் கிடைக்கும் என்பதால் வழிப்பறி செய்தோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். #Tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com