சென்னை - கடலோர மாவட்டங்களில் 2 நாளில் 40 செ.மீட்டர் மழை பெய்யும் அபாயம்

சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு பெய்யும் மழையானது 40 செ.மீ. அளவுக்கு இருக்கலாம் என்று சர்வதேச வானிலை மையங்கள் எச்சரிக்கை தகவலை வெளியிட்டுள்ளன.
சென்னை -  கடலோர மாவட்டங்களில் 2 நாளில் 40 செ.மீட்டர் மழை பெய்யும் அபாயம்
Published on

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை கடந்த மாதம் 27-ந்தேதி தொடங்கியது.

அந்த தொடக்கத்தின் போதே வங்கக்கடலில் தென்மேற்கு பகுதியில் வளி மண்டலத்தில் மேலடுக்குச் சுழற்சி ஏற்பட்டது. இதனால் சென்னை மற்றும் 10 கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் வளி மண்டல மேலடுக்குச் சுழற்சி இன்று (வியாழக்கிழமை) காலை இலங்கை அருகே தொடர்ந்து நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் இன்றும் நாளையும் மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. பெரும்பாலான இடங்களில் பலத்த, மிக பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று மூன்றாவது நாளாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த மூன்று மாவட்டங்களிலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் நேற்று வரை 20 செ.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளது. இதன் காரணமாக சென்னையில் பெரும்பாலான இடங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது.

இந்த நிலையில் வானிலை நிலவரம் குறித்த தகவல்கள் வெளியிடும் இணையத்தள தகவல்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியதை உணர்த்துவதாக உள்ளது. இந்த இணையத் தள தகவல்கள்படி சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இந்த மழையானது 40 செ.மீ. அளவுக்கு இருக்கலாம் என்று பல்வேறு சர்வதேச வானிலை மையங்கள் எச்சரிக்கை தகவலை வெளியிட்டுள்ளன. இந்திய வானிலை ஆய்வாளர்கள் இதை உறுதிப்படுத்தாவிட்டாலும் கூட, அடுத்த இரு தினங்களுக்கு கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறினார்கள்.

வங்கக் கடலில் தொடர்ந்து இருக்கும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மழை நீடிக்கும் என்பது உறுதியாகியுள்ளது. நேற்று முழுவதும் மழை நீடித்தாலும் திங்கட்கிழமை பெய்த மழை அளவை விட குறைவாகவே பெய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. ஆனால் இன்று (வியாழக்கிழமை) மிக அதிக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அடுத்து வரும் இரு நாட்களும் பலத்த மழை பெய்தால், சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு சேதம் ஏற்படும் அபாயச் சூழல் உருவாகியுள்ளது. எனவே மழை சேதத்தை எதிர்கொள்ள பொதுமக்கள் முழு அளவில் தயாராக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே இந்த வார இறுதிக்குள் சில இடங்களில் 15 முதல் 30 செ.மீ. வரை மழை வரை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புதுச்சேரியில் அதிகம் மழை பெய்யும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் ஏற்கனவே கடந்த 4 நாட்கள் மழை காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது. 2015-ம் ஆண்டு பாதிப்பு போல ஏற்பட்டு விடுமோ என்ற பயம் மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது.

ஸ்கைமெட்வெதர் எனும் இணையத் தளத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்யும். அதன் பிறகு மேலடுக்குச் சுழற்சி நகர்ந்து விடும் என்பதால் 4-ந்தேதிக்கு பிறகு மழை அளவு குறைந்து விடும் என்று கூறியுள்ளது. என்றாலும் இன்றும், நாளையும் மழை நீடிக்கும் பட்சத்தில் கடலோர மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையில் மேலும் பாதிப்பு ஏற்படும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com