செம்பரம்பாக்கத்தில் நகைக்காக பெண்ணை கொன்று ஏரியில் வீசினர் - 2 பேர் கைது

செம்பரம்பாக்கத்தில் நகைக்காக பெண்ணை கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செம்பரம்பாக்கத்தில் நகைக்காக பெண்ணை கொன்று ஏரியில் வீசினர் - 2 பேர் கைது
Published on

பூந்தமல்லி:

திருவேற்காடு மாதிரா வேடு பகுதியை சேர்ந்தவர் கோவலன். இவரது மனைவி தனலட்சுமி (35). கட்டிட தொழிலாளியான இவர் கடந்த 15-ந்தேதி வேலைக்கு சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. திடீரென மாயமாகிவிட்டார்.

இது குறித்து கணவர் கோவலன் திருவேற்காடு போலீசில் புகார் அளித்தார்.

இதுபற்றி உடனடியாக போலீசார் விசாரணையை தொடங்கினர். அம்பத்தூர் துணை கமி‌ஷனர் ஈஸ்வரன் உத்தரவின் பேரில் பூந்தமல்லி உதவி கமி‌ஷனர் முத்துவேல் பாண்டி, திருவேற்காடு இன்ஸ்பெக்டர் சண்முகம் ஆகியோர் தனிப்படை அமைத்து விசாரணையை முடுக்கி விட்டனர்.

கோவலன் போலீசில் அளித்த புகாரில், ஜெ.ஜெ. நகர் பகுதியில் கட்டிட வேலைக்காக அழைத்துச் சென்று விட்டேன். கட்டிட மேஸ்திரி சக்கரவர்த்தி மற்றும் ஏழுமலை ஆகியோருடன் செல்வதாக மனைவி கூறியிருந்தார். அவர்கள் மீதுதான் சந்தேகமாக உள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து திருவண்ணாலையை சேர்ந்த 2 பேரையும் போலீசார் அங்கு சென்று மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது 2 பேரும் சேர்ந்து தனலட்சுமியை செம்பரம்பாக்கம் ஏரிக்கு அழைத்து சென்றது தெரிய வந்தது.

வரண்டு கிடக்கும் ஏரியில் ஒரு பகுதியில் மட்டும் முட்டளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. அங்கு மீன் பிடித்த 2 பேரும், தனலட்சுமி அணிந்திருந்த கம்மலை கழற்றி தருமாறு கேட்டனர். இதற்கு அவர் மறுத்ததால் அடித்து தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்துள்ளனர்.

பின்னர் தனலட்சுமி அணிந்திருந்த ½ பவுன் நகையை கொள்ளையடித்து விட்டு அவரது உடலை அங்குள்ள முட்புதரில் வீசிவிட்டு தப்பி சென்றனர். இதன் பிறகு நகையை அடமானம் வைத்து 2 பேரும் ரூ.7 ஆயிரம் பணம் பெற்றுள்ளனர்.

இந்த பணத்தை வைத்து 10 குவாட்டர் மது பாட்டில்களை வாங்கிய இருவரும் போதை தலைக்கேறும் அளவுக்கு மது குடித்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

கொலையாளிகள் 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களை செம்பரம்பாக்கம் ஏரிக்கரைக்கு அழைத்துச் சென்று, தனலட்சுமியின் உடலை மீட்டனர்.

எப்படியாவது மது குடிக்க வேண்டும் என்கிற எண்ணமே சக்கரவர்த்தி, ஏழுமலை ஆகியோரது மனதில் கொலை வெறியை தூண்டியுள்ளது. இதனால் ½ பவுன் நகைக்காக பெண்ணை கொலை செய்துள்ளனர். இந்த வழக்கில் நேற்றுதான் புகார் அளிக்கப்பட்டுள்ளது. உடனடியாக போலீசார் துப்புதுலக்கி கொலையாளிகளை பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ஜெ.ஜெ.நகர் போலீசில் கோவலன் அளித்த புகாரை ஏற்க மறுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com