

ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலத்தில் சந்திரசேகர்ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி (டி.ஆர்.எஸ்.) கட்சி ஆட்சி நடத்தி வருகிறது.
தெலுங்கானா மாநிலத்தில் கடந்த 5-ந்தேதி முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தெலுங்கானா சாலை போக்குவரத்து கழகத்தை முழுமையாக அரசுடன் இணைப்பது, காலி பணியிடங்களுக்கு போதுமான ஆட்களை நியமிப்பது, டிரைவர் - கண்டக்டர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்குவது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்து வருகிறது.
அரசு எச்சரிக்கையை மீறி பணிக்கு திரும்பாத 48 ஆயிரம் ஊழியர்கள் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டனர். இதைக் கண்டித்து மாநிலம் முழுவதும் போராட்டம் நீடித்து வருகிறது.
பலர் தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர். சிலர் உயிரும் இழந்துள்ளனர். போக்குவரத்து தொழிலாளர்களின் இந்த போராட்டத்துக்கு ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் போராட்டக்காரர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு முதல்-மந்திரி சந்திரசேகர்ராவ் இறுதி கெடு விதித்துள்ளார். 5-ந்தேதி நள்ளிரவுக்குள் போராட்டத்தை கைவிடா விட்டால் 50 சதவீதம் தனியார் மயமாக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 3 நாட்கள் அவகாசம் அளிக்கிறேன். நவம்பர் 5-ந்தேதி நள்ளிரவுக்குள் எந்த வித நிபந்தனையும் இன்றி பணிக்கு திரும்ப வேண்டும்.
இந்த கால அவகாசத்திற்குள் பணிக்கு திரும்பாவிட்டால் அவர்களது பணி முடிவுக்கு வந்துவிடும். நிரந்தரமாக அவர்கள் வேலையை இழக்க நேரிடும்.
போராட்டத்தை முடித்துக் கொள்ளாவிட்டால் 50 சதவீத போக்குவரத்து வழித்தடங்களை தனியார் மயமாக்கி விடுவேன்.
தெலுங்கானா மாநில சாலை போக்குவரத்து கழகத்தால் மொத்தம் 10,400 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் 2,100 பஸ்கள் தனியாரிடம் வாடகைக்கு எடுத்து இயக்கப்படுகிறது. 3 ஆயிரம் பஸ்கள் மோசமான நிலையில் உள்ளது.
அதனால் 5,100 பஸ்கள் தனியாருக்கு அனுமதி கொடுக்கப்படும். மீதமுள்ள 5,300 பஸ்கள் போக்குவரத்து கழகம் வசம் இருக்கும்.
இவ்வாறு சந்திரசேகர் ராவ் கூறியுள்ளார்.