

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் பர்மிங்காமில் நடந்த ஆட்டத்தில் (ஏ பிரிவு) உலக சாம்பியன் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்திடம் மண்ணை கவ்வியது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 9 விக்கெட்டுக்கு 277 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து 35 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்த போதிலும் நம்பிக்கையை இழக்கவில்லை.
கேப்டன் இயான் மோர்கன் (8 பவுண்டரி, 5 சிக்சருடன் 87 ரன்), ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் (13 பவுண்டரி, 2 சிக்சருடன் 102 ரன், நாட்-அவுட்) ஆகியோரின் ருத்ரதாண்டவத்தால் இங்கிலாந்து அணி கம்பீரமாக நிமிர்ந்தது. அந்த அணி 40.2 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 240 ரன்கள் எடுத்திருந்த போது மழை பெய்தது. இதையடுத்து டக்வொர்த்-லீவிஸ் விதிப்படி இங்கிலாந்து 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
சதம் அடித்த பென் ஸ்டோக்சை சக வீரர் பட்லர் பாராட்டுகிறார்.
சாம்பியன்ஸ் கோப்பையில் தொடர்ந்து 2-வது முறையாக ஆஸ்திரேலியா (2 முடிவில்லை, ஒரு தோல்வி) ஒரு வெற்றி கூட பெறாமல் போட்டியை விட்டு வெளியேறியது. இங்கிலாந்தின் வெற்றியின் மூலம், 3 புள்ளியுடன் காத்திருந்த வங்காளதேசத்துக்கு அரைஇறுதி அதிர்ஷ்டம் அடித்தது. ஐ.சி.சி. தொடரில் வங்காளதேச அணி அரைஇறுதியை எட்டுவது இதுவே முதல் முறையாகும். 2015-ம் ஆண்டு உலக கோப்பையில் இங்கிலாந்தை ‘நாக்-அவுட்’ செய்த வங்காளதேச அணி இன்று அந்த அணியின் தயவால் நாக்-அவுட் சுற்றுக்குள் நுழைந்திருக்கிறது.