

நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி அடுத்த தடங்கம் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் கவிதா முருகன். இவர் நேற்று தூய்மை பணியாளர்களுடன் தடங்கம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு உள்ள கிருஷ்ணகிரி-சேலம் பைபாஸ் சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுருளிநாதன், ஷகிலா மற்றும் அதியமான்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி தூய்மை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது ஊராட்சி செயலாளர் கஜேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி தூய்மை பணியாளர்களை தரக்குறைவாக பேசுவதாகவும், அவரை இடம் மாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். ஊராட்சி மன்ற தலைவர் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.