

நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தியூபா 5 நாள் அரசு முறை பயணமாக நேற்று இந்தியா வந்தார். அவருடன், 4 அமைச்சர்களும், 12 சட்ட உறுப்பினர்கள் கொண்ட குழு வருகை புரிந்தனர்.
பிரதமர் தியூபா உடன் அவரது மனைவி அர்ஜு ரானா தியூபாவும் உடன் வந்துள்ளார். விமானம் மூலம் தலைநகர் புதுடெல்லி வந்த பிரதமர் தியூபாவை மத்திய வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் வரவேற்றார்.
இந்நிலையில், பிரதமர் தியூபாவிற்கு ஜனாதிபதி மாளிகையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தியூபா மற்றும் அவரது மனைவியை பிரதமர் மோடி நேரில் வரவேற்றார். இருவரும் நடந்து கொண்டே ஜனாதிபதி மாளிகையில் உரையாடினர்.
தியூபா தனது பயணத்தின் போது, இந்தியாவுடனான பஞ்சேஷ்வர் திட்டம் பற்றி ஆலோசனை செய்ய உள்ளார். தனது பணிகளை நிறைவு செய்த பிறகு தியூபா, பீகாரில் உள்ள புத்தகயா மற்றும் ஆந்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள திருப்பதி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்கிறார்.