

மியான்மரின் வடக்குப் பகுதியான ரக்கினே மாநிலத்தில் சிறுபான்மை ரோஹிங்யா இன முஸ்லிம்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். மியான்மரில் பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்டவர்களாக இருக்கும் இவர்களில் சிலர், கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராணுவத்தினரின் தாக்குதலால் உயிருக்கு பயந்து ரோஹிங்யா முஸ்லிம்கள் அண்டை நாடான வங்காளதேசத்திற்கு தப்பிச் சென்ற வண்ணம் உள்ளனர். இந்தியாவிலும் ரோஹிங்யா அகதிகள் தங்கியிருக்கின்றனர். அவர்களை நாடு கடத்த மத்திய அரசு முடிவு செயதுள்ளது.
இதனை எதிர்த்து, மொகமது சலிமுல்லா மற்றும் மொகமது ஷாகிர் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தனர். இந்த மனு மீதான விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மத்திய அரசு வழக்கறிஞர் தாக்கல் செய்த அந்த பதில் மனுவில், ரோஹிங்யா அகதிகள் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘ரோஹிங்யா அகதிகள் சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவி வருகின்றனர். இந்தியாவின் பல பகுதிகளில் அவர்கள் உரிய ஆவணங்கள் இன்றி தொடர்ந்து தங்கி வருகின்றனர். இது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தும் வகையில் அமைந்துள்ளது’ என அதில் கூறப்பட்டுள்ளது.