

புதுடெல்லி:
நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மத்திய அரசு அலுவலகங்கள் குறைந்த அளவு ஊழியர்களை கொண்டே செயல்படுகின்றன. வீடுகளில் இருந்து பணியாற்றி வந்தவர்களில் துறைகளின் இணைச் செயலாளர்கள், கூடுதல் செயலாளர்கள் மற்றும் சிறப்பு செயலாளர்கள் கடந்த 13-ந் தேதி முதல் தங்கள் அலுவலகங்களுக்கு வரத் தொடங்கினார்கள்.
இந்த நிலையில் கடந்த புதன்கிழமை திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட உள்துறை அமைச்சகம், அனைத்து அமைச்சகங்கள், துறைகளைச் சேர்ந்த அலுவலகங்கள் நூறு சதவீத
ஊழியர்கள் வருகையுடன் செயல்படுவதை துணைச் செயலாளர்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட அந்தஸ்தில் உள்ள உயர் அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும் என்று கேட்டுக் கொண்டது.
அதை ஏற்று 33 சதவீதம் பேர் திங்கட்கிழமை (நேற்று) முதல் பணிக்கு திரும்புவார்கள் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்து இருந்தார்.
அதன்படி டெல்லியில் துணைச் செயலாளர்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட அந்தஸ்தில் உள்ள உயர் அதிகாரிகள் நேற்று தங்கள் அலுவலகங்களுக்கு வந்து பணிகளை தொடங்கினார்கள்.
ஆனால் பஸ், ஆட்டோ, வாடகை கார், மெட்ரோ ரெயில்கள் ஓடாததால் அலுவலகங்களுக்கு வருவதற்கு மிகவும் சிரமப்பட்டனர். பலர் சொந்த வாகனங்களில் வந்திருந்ததாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதனால் மத்திய அரசு அலுவலகங்களில் நேற்று ஊழியர்களின் வருகை சற்று அதிகரித்து இருந்தது. கொரோனா நோய் தொற்று ஏற்படுவதை தடுக்கும் வகையில் அலுவலகங்களில் ஊழியர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை நடத்தவும், கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தம் செய்யவும், சமூக
இடைவெளியை கடைபிடிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இனி வரும் நாட்களில் ஊழியர்களின் வருகை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.